நானாவதி கமிஷன்: எதிர்க்கட்சிகள் அமளி- நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
டெல்லி:
நானாவதி கமிஷன் அறிக்கை விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக மற்றும் அகாலிதள உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 1984ம் ஆண்டு நவம்பர் 31ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து டில்லியில் சீக்கியமதத்தினருக்கு எதிராக பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2000ஆவது ஆண்டில் நீதிபதி நானாவதி தலைமையிலான விசாரணைக் கமிஷனைஅப்போது ஆட்சியில் இருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நியமித்தது.
நானாவதி கமிஷன் தனது அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து இந்தஅறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
நானாவதி கமிஷன் அறிக்கையில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை காங்கிரஸின் மூத்த தலைவரும், மத்தியஅமைச்சருமான ஜகதீஷ் டைட்லர் தூண்டியிருக்கக்கூடும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இது தவிர மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரான சஜ்ஜன் குமார் எம்.பி. உட்பட சிலர் மீதும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியதும் நானாவதி கமிஷன் விவகாரம் வெடித்தது. பிரதமரும், ஜகதீஷ் டைட்லரும்பதவி விலக வேண்டும் என்று கோரி பாஜக மற்றும் அகாலி தள எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.இதையடுத்து குஜராத் கலவரத்திற்கு பாஜக தான் காரணம் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் பதிலுக்கு குற்றம் சாட்டினர்.
இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அவைகளும் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறுகையில், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு பொறுப்புஇருக்கிறது. எனவே நடவடிக்கை எடுக்கும் வரை அவையை நடத்த விடமாட்டோம் என்றார்.