கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை: தேர்தல் கமிஷன் அதிரடி
டெல்லி:
கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாநிலதேர்தல் அதிகாரிகளும் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க மத்திய தேர்தல் ஆணையம் நீண்ட காலமாகவே ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.டிசம்பரில் பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிட தடை விதித்து ஏற்கனவே தேர்தல்ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது இந்த உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்துமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவுபிறப்பித்துள்ளது.
அதில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 6 மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பவர்கள் குறித்தவிவரங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆஜராகாமல் இருப்பவர்கள் குறித்த தகவல்களை டிஜிபியிடமிருந்து செப்டம்பர் 10ம் தேதிக்குள் பெறவேண்டும்.அதனடிப்படையில் அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குமாறு மத்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இவ்வாறு பெயர்கள் நீக்கப்பட்டால் அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். தேர்தல் ஆணையத்தின் இந்தஉத்தரவின் நகல்கள் அனைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.