கொலை மிரட்டல்: அஸாருதீனுக்கு பாதுகாப்பு
ஹைதராபாத்:
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அஸாருதீனுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதையடுத்து அவருக்குஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுப் பிரிவு எச்சரித்தையடுத்து இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆந்திரமாநில போலீசார் கூறியுள்ளனர்.துப்பாக்கி ஏந்திய 4 கமாண்டோ போலீஸார் அவருக்கு 24 மணி நேர பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தின் மிக முக்கிய விவிஐபிக்கள் வசிக்கும் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் தான் அஸாரின் பங்களா உள்ளது. கடந்த இருவாரங்களாகவே அவரது செல்போனுக்கு கொலை மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து ஹைதராபாத் கமிஷ்னர் தினேஷ் ரெட்டியிடம் புகார் கொடுத்தார் அஸார். இந் நிலையில் அஸாரின் உயிருக்குஆபத்து ஏற்பட்டுள்ளதாக உளவுப் பிரிவும் எச்சரிக்கை தந்தது.
சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் சிக்கிய ஒரு நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அஸாருக்கு தாவூத்இப்ராகிம் கும்பல் குறி வைத்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ஆந்திர போலீஸாரையும் மத்திய உளவுப் பிரிவினரையும்மகாராஷ்டிர போலீசார் எச்சரித்தனர்.
இந் நிலையில் அஸாருக்கே செல்போனில் மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. இதைத் தொடர்ந்தே அவருக்கு பாதுகாப்புவழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில் அஸாருக்கும் மும்பை நிழல் உலக தாதா கும்பல்களுக்கும் தொடர்புஇருந்ததாகக் கூறப்பட்டது. இதனால் அஸாரின் தொலைபேசிகள், செல்போன்கள் போன்றவை தொடர்ந்து உளவுப்பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.