இந்து, முஸ்லீம் மோதலைத் தடுத்த எம்.எல்.ஏ.!
பொறையார்:
நாகப்பட்டனம் மாவட்டம் பொறையார் அருகே இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்படவிருந்த மோதல்,எம்.எல்.ஏ. தலையீட்டால் தவிர்க்கப்பட்டது.
பொறையார் அருகே இலுப்பூர் கிராமத்தில் கடந்த வாரம் திடீரென ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. சிறிய கூரை அமைத்துஅதை கோவில் போல ஆக்கியிருந்தனர். இந்த இடம் ஜியாவுதீன் என்பவருக்குச் சொந்தமான இடம் என்று கூறப்படுகிறது.இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது.தனக்குச் சொந்தமான இடத்தில் விநாயகர் கோவில் அமைக்கப்பட்டது குறித்த ஜியாவுதீன் போலீஸில் புகார் கொடுத்தார். மேலும்,மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் புகார் அனுப்பினார். நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன் இலுப்பூருக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் எம்.எல்.ஏ. ரங்கநாதனும் கலந்து கொண்டார். பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்தது. இருசமூகத்தைச் சேர்ந்தவர்களும் விட்டுக் கொடுக்காமல் பேசி வந்தனர். இந்த நிலையில் குறுக்கிட்ட எம்.எல்.ஏ. ரங்கநாதன்,இலுப்பூரைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தான் நிலத்தை விலைக்கு வாங்கி அதை இந்துக்களுக்கு தானமாக கொடுப்பதாகஉறுதியளித்தார்.
இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது. புதிய நிலம் கிடைக்கும் வரை, விநாயகர்சிலையை வேறு இடத்தில் வைப்பதற்காக அதிகாரிகள் சிலையை ஜியாவுதீனுக்கு சொந்தமான இடத்திலிருந்து அப்புறப்படுத்திக்கொண்டு சென்றனர்.
எம்.எல்.ஏ.வின் சமயோசிதமான முடிவால் பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது.