சாணக்யா படத்தைத் திரையிட தடை!
சென்னை:
நடிகர் சரத்குமார், நமீதா நடித்துள்ள சாணக்யா படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
விஸ்வாஸ் சுந்தர் தயாரிப்பில் சரத்குமார், நமீதா நடிப்பில் உருவாகியுள்ள படம் சாணக்யா. வருகிற 19ம் தேதி இப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் சுஷில் குப்தா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.அதில், விஷ்வாஸ் சுந்தர் ஏற்கனவே அது என்ற படத்தைத் தயாரிப்பதற்காக ரூ. 26 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
இப்பணத்தை பலமுறை திருப்பிக் கேட்டும், படம் முடிந்தவுடன் திருப்பித் தருவதாக கூறியிருந்தார். ஆனால் கூறியபடி அவர் பணத்தைத் தரவில்லை. எனக்குப் பணம் கொடுக்காத நிலையில் சாணக்யா படத்தைத் தயாரித்துள்ளார்.
எனவே என்னிடம் வாங்கிய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்திய பிறகே சாணக்யா படத்தை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவிடம், புதன்கிழமைக்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்தி விடுவதாக சுந்தரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்த, பணத்தை கூறியபடி திருப்பித் தந்து விட வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications