புயல்- ஆந்திராவில் ரயில் ஆற்றில் விழுந்து 77 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திராவில் கன மழை காரணமாக அரிக்கப்பட்ட தண்டவாளத்தில் சென்ற ரயில் ஆற்றில் விழுந்தது. இதில் 77 பேர்பலியாயினர். 200 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர்.
தமிழகத்தை மிரட்டிய புயல் நேற்று திசைமாறி ஆந்திராவைத் தாக்கியது. இதனால் அங்கு பெய்து வரும் கன மழையில் பலபகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இன்று அதிகாலை நல்கொண்டா மாவட்டம் அருகே செகந்திராபாத்- ரேபள்ளி டெல்டா பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.ஒரு ஆற்றுப் பாலத்தை அந்த ரயில் கடந்து கொண்டிருந்தபோது அந்த ரயில் ஆற்றுக்குள் விழுந்தது.
ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதில் 5 பெட்டிகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தூங்கிக் கொண்டிருந்தபயணிகள் பெட்டிகளோடு ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பெட்டிகளில் தூங்கிக் கொண்டு இருந்த 200 க்கும்மேற்பட்டோர் வெள்ளத்தில் மூழ்கினர்.
இந்த விபத்தில் 77 பேர் பலியாயினர். 200 பேருக்கு மேல் காயமடைந்தனர். சாவு எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம்என்று அஞ்சப்படுகிறது. இறந்த 77 பேரின் சடங்களும் மீட்கப்பட்டுள்ளன.மழை காரணமாக தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது தெரியாமல் அந்த ரயிலை அதிகாரிகள் இயங்க அனுமதித்துள்ளனர்.
மேலும் ரெயிலின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்த பயணிகள் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கின்றனர். அவர்களை மீட்க படகு,மற்றும் ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளது. மேலும் மீட்புப் பணியில் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட மத்திய ரெயில்வே இணை அமைச்சர் வேலு விரைந்துள்ளார்.