உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு?
புதுடெல்லி:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அரசியல் குறுக்கீடுகள் இருப்பதாக மத்திய சட்டஅமைச்சர் எச்.ஆர். பரத்வாஜ் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை நீதிமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 25 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றைநிரப்பக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை வழக்கறிஞர்களும், பொது அமைப்புகளும் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன.புதிதாக 17 நீதிபதிகளைப் பரிந்துரை செய்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஒரு பட்டியலை அனுப்பிவைத்துள்ளது. இருப்பினும் நீதிபதிகள் நியமனத்தில் வரலாறு காணாத அளவுக்கு பெருத்த அமைதி காத்துவருகிறது மத்திய அரசு.
இது பல்வேறு சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பாமகவும்,திமுகவும் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருவதாக ஏற்கனவே சர்ச்சை உள்ளது.
பாமகவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன. குறிப்பாக அக்கட்சியின் தலைவர்டாக்டர் ராமதாஸ் மீது சில முக்கியமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுவரை இருந்து வந்த நீதிபதிகளில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை என்பதை ராமதாஸ்பலமுறை நேரடியாகவும், மறைமுகமாகவும் குறிப்பிட்டு குறைப்பட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரவையில் பாமகவும் முக்கியப் பங்கு வகிப்பதால், அதைப்பயன்படுத்தி வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரை நீதிபதி பதவிக்கு கொண்டு வர பாமக தீவிரமாகமுயற்சிப்பதாக வழக்கறிஞர்கள் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
அதேபோல திமுகவும் தன் தரப்புக்கு தனக்கு ஆதரவான சிலரை நீதிபதிகளாக நியமிக்க முயற்சிப்பதாககூறப்படுகிறது. ஆனால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், அரசியல் சார்புடையவர்களை நீதிபதிகளாக நியமித்தால்பெரும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாகவே நீதிபதிகள் நியமனத்தில் இவ்வளவு பெரிய சிக்கல் நிலவுவதாக வழக்கறிஞர்கள் மத்தியில்கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீதிபதிகள் நியமனத்தில் அரசியல்குறுக்கீடு இருப்பதை மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ்மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதிகளாக நியமிக்கப்படுவோர் அரசியல் பின்னணி கொண்டவர்களாக இருக்கக்கூடாது. அது நாட்டின் நலனுக்கு பாதகமாக அமைந்து விடும்.
நீதிபதிகளாக இருப்பவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும், யாருக்கும் ஆதரவாக அவர்கள் இருக்கக் கூடாது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இதுபோன்ற சில சிக்கல்கள் நிலவுகின்றன. அவை சில நாட்களில்சரியாகி விடும். விரைவில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவர் என்றார்.
இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளின் குறுக்கீடு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னைஉயர்நீதிமன்றத்தில் (மதுரை கிளையையும் சேர்த்து) மொத்தம் 42 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. அதில்காலியிடம் மொத்தம் 23 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.