நிரம்பும் மேட்டூர்: காவிரியில் வெள்ள அபாயம்
மேட்டூர்:
மேட்டூர் அணை மீண்டும் நிரம்பி வருகிறது. இந்த ஆண்டில் 4வது முறையாக இந்த அணை நிரம்பவுள்ளது.
வங்கக்கடலில் மீண்டும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும்பலத்த மழை பெய்து வருகிறது.எனவே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையிலும் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது.
இந்த ஆண்டில் தமிழகம், கர்நாடக மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது.இந்நிலையில் அணை நீர்மட்டம் சனிக்கிழமை குறைந்தது. முழு அளவவான 120 அடியிலிருந்து 119 அடியாக குறைந்தது.
இதற்கிடையில் டெல்டா பாசனத்திற்கு விடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அணையின் நீர் மட்டம் நேற்று 119.88 அடியாக உயர்ந்துள்ளது.எனவே இன்றும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மேட்டூர் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணை நிரம்பினால் மீண்டும் பெரும் அளவில் தண்ணீர் திறந்துவிடப்படும். இதனால் தஞ்சை, கடலூர், திருவாரூர், திருச்சிஉள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன் தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் இந்தப் பகுதிகள் வெள்ளக் காடாயின.
காவிரி நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் கர்நாடகத்தில் இருந்து இது வரை 178.21 டிஎம்சிதண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை மேட்டூர் அணைக்கு 333.27 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. அதவாவதுகூடுதலாக 155.06 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.