வெள்ளச் சேதம்: பார்வையிட பிரதமர் வராதது ஏன்?- அதிமுக கேள்வி
டெல்லி:
தமிழகத்தில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட பிரதமர் மன்மோகன் சிங் வராததற்கு அதிமுக கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
ஒரே மாதத்தில் 3 முறை கன மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழகம் தத்தளித்துக் கொண்டுள்ள நிலையில் மாநிலத்துக்குபோதிய நிதி உதவியையும் மத்திய அரசு வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.ராஜ்யசபாவில் இந்த விவகாரத்தைக் கிளப்பிய அதிமுக எம்பியான பி.ஜி.நாராயணன், தமிழக வெள்ளச் சேதம் குறித்து மத்தியஅரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. பெரும் சேதத்தை தமிழகம் சந்தித்துள்ள நிலையில் வெள்ளச் சேதத்தை நேரில்பார்வையிட பிரதமர் மன்மோகன் சிங் வராதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இன்னொரு அதிமுக எம்பியான தங்கத் தமிழ்செல்வன் பேசுகையில், வெள்ள நிவாரணமாக முதல் கட்டமாக தமிழக அரசு ரூ. 3,000கோடி கோரியது. ஆனால், வெறும் ரூ. 500 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளீர்கள். இது எந்தப் பணிகளுக்கும் உதவாது என்றார்.
இதையடுத்துப் பேசிய திமுக எம்பியான சரத்குமார், காங்கிரஸ் எம்பியான ஜி.கே. வாசன் ஆகியோரும் தமிழகத்துக்குக் கூடுதல்நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்,
வெள்ளத்தால் தென் மாநிலங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மறு கட்டமைப்பு, நிவாரணப் பணிகள்தொடர்பாக முழுமையான விவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு அம் மாநில முதல்வர்களிடம் மத்திய அரசு கேட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மிக விரைவாக மத்திய அரசு உதவிகளை வழங்கும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள உதவிஇடைக்கால நிவாரணம் தான். மாநில அரசுகளின் கோரிக்கைகளை திட்டக் கமிஷன் ஆராய்ந்த பிறகு போதிய அளவுக்கு நிதிதரப்படும்.
மாநில அரசுகள் தரும் வெறும் மனுக்களை மட்டும் வைத்துக் கொண்டு மத்திய அரசால் முழுமையாக உதவிட முடியாது.முறைப்படியான அறிக்கைகள் கிடைத்த பிறகு தாமதமில்லாமல் உதவிகள் வழங்கப்படும் என்றார்.