டெஸ்ட்: மழையால் முதல் நாள் போட்டி ரத்து
சென்னை:
சென்னையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக சேப்பாக்கம் ஸ்டேடியம் தொப்பலாகிவிட்டது. இதனால்இன்று தொடங்கவிருந்த இந்தியா- இலங்கைக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டுவிட்டது.
இந்தப் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், அடை மழையால் மைதானம் முழுவதும்தண்ணீர் தேங்கிவிட்டது. மைதானத்தில் இருந்து நீரை வெளியேற்றும் வேலையில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்ஈடுபடுத்தப்பட்டனர்.ஆட்டம் சிறிது தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மழையும் விடாமல் பெய்யத் தொடங்கியதால் 11.30மணியளவில் இரு அம்பயர்கள் மைதானத்தை சோதனையிட்டனர்.
அப்போது விளையாடுவதற்கு ஏற்ற சூழலில் மைதானம் இல்லாததாலும் மழை தொடர்வதாலும் முதல் நாள் ஆட்டத்தை ரத்துசெய்வதாக அறிவித்தனர்.
இதனால் மைதானத்தில் கூடியிருந்த சொற்ப ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர். சென்னையில் தொடர்ந்து, புயலும், மழையுமாகஇருப்பது தெரிந்தும், போட்டியை நடத்த முன் வந்த தமிழக கிரிக்கெட் சங்கத்தை திட்டியவாரே கலைந்து சென்றனர்.
மழை விட்டால் நாளை முதல் போட்டி தொடங்கும். காலை 9 மணி முதல் தினமும் 97 ஓவர்கள் என்ற கணக்கில் போட்டி நடக்கும்.
ஆனால், புயல் சின்னம் கரையைக் கடக்க இருப்பதால் அடுத்த 4 நாட்களுக்கும் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டி நடப்பது சந்தேகமாகவே உள்ளது.
முன்னதாக மழை நேரத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் போட்டியையே ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னைநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை நேற்று நீதிபதி தள்ளுபடி செய்தார்.