தமிழகத்தின் அருகே புயல்: அரசு, ராணுவம் தயார் நிலை- பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் பானூஸ் சென்னைக்கு தென் கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த சூறாவளிக் காற்று வீசத்தொடங்கிவிட்டது.
இன்று பிற்பகல் முதல் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யத் தொடங்கும் என வானிலை ஆராய்ச்சிநிலையம் எச்சரித்துள்ளது.
பலத்த மழையுடன், மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றும் வீசக்குடும் எனவும் வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. புயல் 350 கிலோமீட்டர் தொலைவில் வரும்போதுதான் அது எந்த இடத்தில் கரையைக்கடக்கும் என்பதைத் கணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு உருவான 3 புயல் சின்னங்களும் தமிழக கரைகளில் கடக்கவில்லை. ஆனால் தற்போது உருவாகியுள்ள, வலுவானஃபனூஸ், தமிழக கரையைக் கடக்கும் வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளதால், வட தமிழகத்தில் பெரும் பீதி நிலவுகிறது.
சென்னைக்கு கொஞ்சம் கீழே தென் பகுதியில் இந்தப் புயல் கரையைக் கடக்கலாம் என்று கருதப்படுகிறது. பெரும் மேகக்கூட்டத்துடன் இந்தப் புயல் நெருங்குவதால் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என நான்கு மாநிலங்களையும் இந்த மேகக்கூட்டம் வியாபித்து மழையைக் கொட்டும் என்று தெரிகிறது.
தமிழகத்தை நெருங்கி வரும் பனூஸ் புயல்
உணவு தானிய இருப்பு, மண்ணெண்ணெய் இருப்பு, குடிநீர் ஏற்பாடு ஆகியவற்றை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. அவசரத்துக்குத் தேவைப்படும் படகுகளைத் தயார் நிலையில் வைக்குமாறும் ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் ஏரி, குளங்கள், கண்மாய்கள் ஆகியவற்றின் நீர் இருப்பைத் தொடர்ந்து கண்காணித்து தேவைப்படும் நேரத்தில்தண்ணீரைத் திறந்துவிடுமாறும், தண்ணீர் வெளியேறுவதற்கான வாய்க்கால்களில் அடைப்புகளை நீக்கவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றவும், அவர்களை பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள்ஆகியவற்றில் தங்க வைக்கவும் இப்போதே முன்னேற்பாடுகளைச் செய்து வைக்குமாறும் ஆணையிடப்பட்டுள்ளது. இந்தமக்களுக்கு லட்சக்கணக்கில் உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மீட்புப் பணிகளுக்கு ஹெலிகாப்டர்கள், படகுகளைத் தயார் நிலையில் வைத்திருமாறு ராணுவத்திற்கும் தமிழக அரசுகோரிக்கை விடுத்துள்ளது.
புயல் சேதம் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ள கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கவும் மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிக் கூடங்களுக்குவிடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையிலும் மாநகராட்சி நிர்வாகம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று கன மழைகள் மூலம் கிடைத்த பாடங்களை அடிப்படையாகக் கொண்டு வட மாவட்ட நிர்வாகங்கள் தற்போதையபுயலை சமாளிக்க முழு வீச்சில் தயாராக இருக்கின்றன. பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.