காஷ்மீர்-ஆப்கான்-பாகிஸ்தானில் பயங்கர பூகம்பம்
ஜம்மூ:
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஜம்மூ-காஷ்மீரில் இன்று மீண்டும் மிகப் பெரும் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.8 என்ற அளவுக்கு இந்த பூகம்பத்தின் சக்தி இருந்தது.
கடந்த அக்டோபர் 8ம் தேதி இந்திய-பாகிஸ்தான் எல்லையில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டு சுமார் 87,000 பேர் பலியாயினர்.மேலும் லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து திறந்த வெளியில் தாற்காலிகக் கூடாரங்களில் வசித்து வருகின்றனர்.
இமயமலையில் பனி கொட்ட ஆரம்பித்துவிட்ட நிலையில் இந்த தாற்காலிக கூடாரங்களில் வசிப்போரில் பலர் உயிரிழந்துவருகின்றனர். குறிப்பாக நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியாகிவிட்டன.
இந் நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் பயங்கர பூகம்பம் தாக்கியுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ்மலைத் தொடரில் இந்த நில நடுக்கத்தின் மையம் இருந்தது.
இந்த நடுக்கத்தால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உயிர்ச் சேதம் குறித்து இதுவரைதகவல் இல்லை. இந்தியாவில் காஷ்மீர் பகுதியும் மிக பயங்கரமாக அதிர்ந்தது. யூரி, ஸ்ரீநகர் மாவட்டங்களில் வீடுகள் இடிந்துவிழுந்தன.
இந்த நில நடுக்கத்தை டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உணர முடிந்தது.
நில நடுக்கத்தையடுத்து இந்தியா, பாகிஸ்தான் பகுதியில் உள்ள காஷ்மீரில் தாற்காலிக கூடாரங்கள், வீடுகளில் வசிக்கும்ஆயிரக்கணக்கானவர்கள் அவற்றை விட்டு அலறியபடி வெளியில் ஓடினர். ஆனால், வெளியில் 2 டிகிரி அளவுக்குக் குளிர் காற்றுவீசியதால் மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பி அச்சத்துடனும் அழுகையுடனும் பொழுதைக் கழித்தனர்.
நில நடுக்கத்தையடுத்து மரங்களை விட்டு ஆயிரக்கணக்கான பறவைகளும் இருளில் குரல் எழுப்பியபடி பறக்க ஆரம்பித்தன.
அதே போல வடக்கு பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளும் இந்த நில நடுக்கத்தால் அதிர்ந்தன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப்பகுதியில் உள்ள முஸாபராபாத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு ஓடினர். கடந்த நிலநடுக்கத்தின்போது இங்கு தான்மிக அதிக அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2 மாதங்களுக்கு பின் பெண் மீட்பு:
இதற்கிடையே பாகிஸ்தானில் கடந்த அக்டோபரில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இடிந்து போன வீட்டின் இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த பெண் ஒருவர் 2 மாதங்களுக்குப் பின் நேற்று உயிருடன் மீட்கப்பட்டார்.
முஸாபராபாத் நகரின் இடிபாடுகளுக்குள் சுமார் 64 நாட்கள் உணவு, தண்ணீர் கூட இல்லாமல் அவர் கிடந்தார். நக்ஸா பீவி என்றஅந்த 40 வயதுப் பெண்ணை இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்தவர்கள் உயிருடன் மீட்டனர்.
இவர் எப்படி இத்தனை நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உயிருடன் இருந்தார் என்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது.