தமிழக அமைச்சர்களுக்கு ஸ்கார்பியோ கார்!
சென்னை:
தமிழக அமைச்சர்களுக்கு அம்பாசடர் கார்களுக்குப் பதில் சொகுசான ஸ்கார்பியோ கார்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பாரம்பரியமாக அம்பாசடர் கார்கள்தான் வழங்கப்பட்டு வருகிறது.இந்துஸ்தான் மோட்டர்ஸ் தயாரிக்கும் இந்தக் கார்கள்தான் அரசின் அதிகாரப்பூர்வ வாகனமாகும்.மிக மிக முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே சொகுசு கார்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. முதல்வர் ஜெயலலிதா தனது சொந்தக்காரையே (டாடா சபாரி அல்லது ஹோண்டா யூட்டிலிட்டி வெகிக்கிள்) பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்.
மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் அரசு வழங்கியுள்ள அம்பாசடர் கார்களையேப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் அமைச்சர்கள் பயன்படுத்தும் அம்பாசடர் கார்களுக்கு விடை கொடுத்துள்ளது தமிழக அரசு.
இந்தக் கார்களின் பராமரிப்புச் செலவு அதிகமாக இருப்பதாலும், பழமையான தோற்றத்தில் இருப்பதாலும், அடிக்கடிபழுதுபடுவதைத் தவிர்க்கவும், நீண்ட தூரப் பயணத்திற்கேற்ற வகையிலும் சொகுசான ஸ்கார்பியோ கார்களை பயன்படுத்த அரசுமுடிவெடுத்துள்ளது.
மகிந்திரா நிறுவனம் தயாரிக்கும் இந்தக் கார்கள் தமிழக அமைச்சர்கள் அனைவருக்கும் வாங்கித் தரப்பட்டுள்ளன.
ஒரு ஸ்கார்பியோ காரின் விலை ரூ. 8.5 லட்சமாகும். குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட இந்தக் கார்கள் அனைத்தும் ஒரேநிறத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் விருப்பத்திற்கேற்ற வாகன எண்ணுடன் இன்று முதல் இந்தக் கார்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.அமைச்சர்களுக்கு மட்டுமே இப்போதைக்கு ஸ்கார்பியோ வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு அதே பழைய அம்பாசடர்தானாம்.
அது சரி, அமைச்சர்களின் கார் மாறினால் அரசாங்கத்தின் ஸ்பீடு மாறுமா?












Click it and Unblock the Notifications