சோனியாவுடன் திண்டிவனம் திடீர் சந்திப்பு
டெல்லி:
தமிழக காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவராக மாறியுள்ள திண்டிவனம் ராமமூர்த்தி திடீரென டெல்லி சென்று சோனியாகாந்தியை சந்தித்துப் பேசினார்.
திமுக தலைவர் கருணாநிதியை பகிரங்கமாக விமர்சித்து வரும் திண்டிவனம் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியில் வன்னியர்கள்முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.கருணாநதியை கடுமையாக விமர்சித்துப் பேசி வரும் அவர் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து தனது கருத்துக்களுக்குஆதரவு திரட்டி வருகிறார். அவரது போக்கால் திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
ஆனால் திண்டிவனத்திற்கு எதிராக வெளிப்படையாக செயல்பட்டால் அது வன்னியர்களை பகைத்துக் கொள்வதாக மாறி விடும்என்பதால் அடக்கி வாசிக்கிறது திமுக.
இருப்பினும், திண்டிவனத்தை சற்றே தட்டி வைக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் திமுக தரப்பு கோரிக்கைவைத்தது. இதைத் தொடர்ந்து திண்டிவனத்தாருக்கு விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு உரிய விளக்கத்தை திண்டிவனம் ஏற்கனவே அனுப்பி விட்டார். இந் நிலையில், வேலூரில் நடந்த கூட்டத்தில்திண்டிவனம் தாக்கப்பட்டார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருணாநிதியின் தூண்டுதலின்பேரில்தான், இத் தாக்குதல் நடந்ததாக மீண்டும் கருணாநதி மீது பாய்ந்தார் ராமமூர்த்தி.
இந் நிலையில் டெல்லிக்கு வருமாறு திண்டிவனத்துக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அவர் டெல்லி விரைந்தார். அங்குகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.
உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சோனியா விசாரித்ததாகவும், கருணாநிதிக்கு எதிரான நிலையைக் கைவிடுமாறும் சோனியாகூறியதாகத் தெரிகிறது. கட்சியில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். ஆனால், ஜெயலலிதா ஆதரவு நிலையைக் கைவிட்டால்தான் அது சாத்தியம் என சோனியா கூறி அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும் இதுதொடர்பாக திண்டிவனம் என்ன சொன்னார் என்று உடனடியாகத் தெரியவில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் பிளவுபட்டால் திமுகவிடம் போதிய சீட்களைப் பெற முடியாது எனசோனியா கருதுவதாகத் தெரிகிறது.