என் டெலிபோன்களும் ஒட்டு கேட்பு: ஜெ. அதிரடி புகார்
சென்னை:
தனது தொலைபேசிகளையும் மத்திய அரசு ஒட்டுக் கேட்டு வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உத்தரவின் பேரில் தனது தொலைபேசிகளும் தனது கட்சியின் பொதுச் செயலாளருமானஅமர்சிங்கின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் சமீபத்தில் பரபரப்பு புகாரைத்தெரிவித்தார். முலாயமின் புகாரை காங்கிரஸ் தலைமை நிராகரித்துவிட்டது.ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ், பிகார் முதல்வர் நிதிஷ் குமார்ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் முலாயம் கோரி வருகிறார். முலாயமின்கோரிக்கைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந் நிலையில் முலாயமின் வலது கரமான அமர்சிங் இன்று சென்னை வந்தார். தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவை அவர்சந்தித்தார்.
முலாயம் சிங்கின் டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு தருமாறு கோரினார். அமர் சிங்கின் கோரிக்கைக்கு100 சதவீதம் ஆதரவளிப்பதாகத் தெரிவித்த ஜெயலலிதா பின்னர் ஒரு அதிரடி அறிக்கை வெளியிட்டார். அதில்,
என்னுடைய டெலிபோன்களையும் மத்திய அரசு ஒட்டுக் கேட்கிறது என்று நினைக்கிறேன். நான் இது வரை இந்த விஷயத்தைவெளியிடாமல் வைத்திருந்தேன். ஏனென்றால் நாங்கள் ஒட்டுக் கேட்பதில்லை என்ற ஒரே மாதிரியான மறுப்பு மத்தியஅரசிடமிருந்து வரும் என்று எனக்கு தெரியும்.
இந்த டெலிபோன் ஒட்டு கேட்பு அதிர்ச்சியாகவும் ஆத்திரமூட்டுவதாகவும் உள்ளது. அரசியல் எதிரிகளைப் பழிவாங்க மத்தியஅரசு எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படுகிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது. அரசியல் எதிரிகளை அரசியல்ரீதியில்சந்திக்க வேண்டும். தேர்தலில் சவாலை சந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ரகசியமான நடவடிக்கைகளால் பழிவாங்கமுயல்வது கடும் கண்டனத்துக்குரியது.
இன்று முலாயம், அமர்சிங்குக்கு ஏற்பட்ட கதி நாளை எந்த எதிர்க் கட்சித் தலைவருக்கும் ஏற்படலாம். மத்திய அரசின்கொள்கைளுக்கு எதிரானவர்களை எல்லாம் எதிரிகளாகவும், கிரிமினல்களாகவும் நடத்துவதா?
தற்போது அமர் சிங் இந்த டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக தகுந்த ஆதரங்களை வெளியிட்டுள்ளார். எனவேஉடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சியைக் கண்டறியவேண்டும்.
ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான பேச்சு சுதந்திரத்தை பாதிக்கும் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
அமர்சிங் பேட்டி:
முன்னதாக ஜெயலலிதாவை சந்தித்த பின் அமர்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய உளவுப் பிரிவினரும், சிபிஐயும் என்னை சிக்கலில் சிக்கவைக்க டெலிபோன் ஒட்டு கேட்பு திட்டத்தை அரங்கேற்றிஉள்ளன. பாதிக்கப்பட்டுள்ள நான் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறேன்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மீதோ, டெல்லி போலீசார் மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இதுவரைஅவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. நாங்கள் தான் கண்டுபிடித்து கூறியுள்ளோம்.
இன்று எனது டெலிபோன் பேச்சை ஒட்டு கேட்பது போல் ஜெயலலிதாவின் டெலிபோனை ஒட்டு கேட்பார்கள். இந்த விஷயத்தில்மத்திய அரசு சரியாக நடவடிக்கை எடுக்காமல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மூலம் பேசி வருகிறது. அவர்கள் திட்டமிட்டுஎதிர்க்கட்சிகளை ஒழிக்க முடிவு செய்துள்ளார்கள்.
எனது டெலிபோன்களை மட்டுமல்ல பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் போன்களும் ஒட்டு கேட்கப்படுகின்றன.
இச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதா எனக்கு 100சதவீதம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார் என்றார் அமர்சிங்.