சென்னை பஸ்சில் 1,000 டெடோனேட்டர்கள்!
சென்னை :
தர்மபுரியிலிருந்து, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்த அரசுப் பேருந்தில் ஏராளமான வெடிபொருட்கள் அடங்கியபை கண்டுபிடிக்கப்பட்டது.
தர்மபுரியிலிருந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அரசு விரைவுப் பேருந்து சென்னைக்குக் கிளம்பியது. இரவு 7மணிக்கு சென்னை கோயம்பேடு வந்து சேர்ந்தது.பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் ஓட்டுனர் ஜெகந்நாதன் பேருந்தை ஒருமுறை பரிசோதனை செய்துள்ளார்.அப்போது ஒரு இருக்கையின் கீழே பெரிய பை இருந்ததைப் பார்த்த அவர் அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது, அதில், 2பெட்டிகளில் ஏராளமான டெட்டனேட்டர்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அந்தப் பையை போலீஸாரிடம் ஒப்படைத்தார். போலீஸார் பையை முழுமையாக சோதித்துப் பார்த்தனர். மொத்தம்1,000 டெட்டனேட்டர்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
இந்த டெட்டனேட்டர்கள் கல் குவாரியில் பயன்படுத்த எடுத்து வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கோயம்பேடு பஸ்நிலையத்தில் பலத்த போலீஸ் கண்காணிப்பு இருப்பதால் இதைக் கொண்டு வந்தவர் பயத்தில் வெடிபொருள் இருந்த பையைஅப்படியே விட்டுச் சென்றிருக்கலாம் என போலீஸார் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பையைக் கொண்டு வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. பெருமளவில் டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி, பெங்களூர் மற்றும்ஆந்திராவிலிருந்து வரும் பேருந்துகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.