கவுன்சிலருக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள திமுக கவுன்சிலர் தனசேகரனுக்குசென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடுசெய்துள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மழை, வெள்ள நிவாரணம் பெறக் காத்திருந்த 42 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தனர். இந்தசம்பவத்திற்கு திமுகவினர் பரப்பிய வதந்தியே காரணம் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா இது தொடர்பாக விசாரணைக்குஉத்தரவிட்டார்.போலீஸ் விசாரணையின் இறுதியில், கே.கே.நகர் திமுக கவுன்சிலர் தனசேகரன் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டதனசேகரன் ஜாமீன் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த அமர்வு நீதிமன்றம்,தனசேகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இருப்பினும் தமிழக அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், தனசேகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும், தனசேகரன்குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டதால் அவரால் விடுதலையாகி வெளியே வர முடியவில்லை.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் மேல் முறையீடுசெய்யப்பட்டுள்ளது. அதில், வதந்தி பரப்பிய முக்கிய நபர் தனசேகரன். அவர் அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவர். இந்தசம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே இந்த சமயத்தில் தனசேகரன் விடுதலை செய்யப்பட்டால்அது விசாரணையைப் பாதிக்கும்.
மேலும், தனசேகரன் விடுதலையாகி வெளியே வந்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவார். எனவே அவரை விடுதலை செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.