எம்எல்ஏக்கள் தாவல்: பாமகவுக்கு பாதிப்பா?
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று தலித் எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் சேர்ந்துள்ளதால் பாமகவுக்கு எந்தவிதபாதிப்பும் ஏற்படாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
வந்தவாசி முருகவேல்ராஜன், தாராபுரம் சிவகாமி வின்சென்ட், அந்தியூர் எஸ்.ஆர்.கிருஷ்ணன் ஆகிய மூன்று பாமகஎம்.எல்.ஏக்களும் அக்கட்சியிலிருந்தும், எம்.எல்.ஏ.பதவியிலிருந்தும் விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.சட்டசபையின் ஆயுட்காலம் முடிவடையவுள்ள நிலையில் இந்த மூன்று பேரும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். திமுககூட்டணியை உடைக்க அதிமுக பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதி திரும்பத் திரும்ப கூறிவரும் நிலையில் 3 பாமக எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இணைந்திருப்பது, கருணாநிதி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின்புகாரை நிரூபிப்பது போல உள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து பாமகவை பிரிக்க அதிமுக ஆரம்பத்தில் இருந்தே முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது. அதிமுகவில்இணைந்தால் கேட்கும் தொகுதிகள் கொடுக்கப்படும் எனவும் பாமக தலைமைக்கு தகவல் அனுப்பியது அதிமுக மேலிடம் என்றுஅரசியல் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
ஆனால் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்றால் வன்னியர்களே ஒரு மாதிரியாக நினைப்பார்கள் என்பதாலும்,அதிமுகவின் இந்த தூதை சாக்காக வைத்தே திமுக கூட்டணியில் நமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளலாம் என்றநோக்கிலும், அதிமுகவின் தூதை நிராகரித்தார் ராமதாஸ் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் பாமகவில் உள்ள தலித் எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்துள்ளது அதிமுக. ஆனால் இந்த இழுப்பால்,பாமகவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று ஒரு கருத்து பலமாக உலவுகிறது.
பாமகவைப் பொருத்தவரை அதன் வாக்கு வங்கி வன்னியர்கள் மட்டுமே. தலித் மக்களின் வாக்குகள், பாமகவின் வெற்றி,தோல்வியை பெரிய அளவில் நிர்ணயிப்பதில்லை. எனவே இந்த மூன்று பேரின் விலகலால் பாமகவுக்கு பெரும் பாதிப்புஏற்படும் என்று கூறுவதற்கில்லை.
அதேபோல, பாமக வன்னியர் கட்சி, தலித் விரோத கட்சி என்ற புகார் எல்லாம் தற்போது எடுபடாது. பாமகவில் வன்னியர்களுக்குமட்டுமே பிரதான இடம் கொடுக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
எனவே பாமகவில் தலித்துகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பிரசாரம் செய்தால் அது எடுபடாது என்று பாமக தரப்பில்நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. மேலும் தற்போது விலகியுள்ள 3 தலித் எம்.எல்.ஏக்களுக்கும் தலித் மக்களிடையே பெரியஅளவில் செல்வாக்கு இல்லை.
எஸ்.ஆர்.கிருஷ்ணன், சிவகாமி வின்சென்ட் ஆகியோருக்கு மக்கள் செல்வாக்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதே சமயம்,மதுரையை சொந்த ஊராகக் கொண்ட முருகவேல்ராஜன் ஏற்கனவே தேவேந்திர குல இளைஞர் பேரவை என்ற அமைப்பைநடத்தி வந்தவர்.
இவருக்கு மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளில் ஓரளவுக்கு செல்வாக்கு உண்டு. ஒட்டுமொத்தமாக கூட்டிக் கழித்துப் பார்த்தால்தேர்தல் நேரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்த மட்டுமே இந்த எம்.எல்.ஏக்கள் விலகல் பயன்படும், மற்றபடி தேர்தலிலோ, திமுககூட்டணியிலோ பெரிய அளவில் இது பாதிப்பை ஏற்படுத்தாது என்றே திமுக கூட்டணி வட்டாரத்தில் பலத்த நம்பிக்கை உள்ளது.
அதே சமயம், காங்கிரஸ், மதிமுக போன்ற மற்ற கட்சிகளிலிருந்து பெரிய புள்ளிகள் யாரேனும் விலகி அதிமுகவில் சேர்ந்தால்அது தேர்தல் கணக்குகளில் சாதக, பாதகங்களை ஏற்படுத்தக் கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.