திமுக கூட்டணி தேர்தல் பிரசாரம் இன்று துவக்கம்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக மக்களை தயார்படுத்தும் வகையிலான திமுக கூட்டணியின் பிரசார இயக்கம் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது.
சென்னையில் இன்றிரவு நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசுகின்றனர்.சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை, அதிமுக அரசுக்கு எதிரான பிரசார இயக்கமாக திமுக கூட்டணி தொடங்குகிறது. முறைப்படியானதேர்தல் பிரசாரத்திற்கு முன்னோட்டமாக இந்த பிரசார இயக்கம் நடத்தப்படவுள்ளது.
இந்தப் பிரசார இயக்கத்தின் தொடக்கமாக சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இன்று மாலை பிரமாண்ட பொதுக் கூட்டம்நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், பாமக தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் செளந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
புதுவையில் உடைகிறது திமுக கூட்டணி?:
இதற்கிடையே, தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாண்டிச்சேரியில் அதிமுகவுடன்கூட்டணி அமைத்தோ அல்லது தனித்தோ போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கும் கூட்டணி அமைப்பது,தொகுதிப் பங்கீடுகள் என புதுவை அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் புதுவையிலும் நீடிக்கின்றன. காங்கிரஸ் கட்சிபுதுவையில் பிரதான கட்சியாக உள்ளது. அதற்கு அடுத்த கட்சியாக திமுக, பாமக ஆகியவை உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளும்அங்கு வலுவாகவே உள்ளன. மதிமுக இன்னும் பச்சிளம் குழந்தையாகவே உள்ளது.
அதிமுகவைப் பொருத்தவரை இந்தத் தேர்தலை அது தனித்து சந்திக்காது என்று தெரிகிறது. காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றுதனிக் கட்சி தொடங்கியுள்ள முன்னாள் அமைச்சர் ப.கண்ணன், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடன் அதிமுககூட்டணி அமைக்கவுள்ளது.
அதேபோல பாஜகவும் அதிமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம்.
இப்படிக் கூட்டணிகள் ஓரளவு உறுதியாகியுள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் வேறு எண்ணம் எழுந்துள்ளது.குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை. (தமிழகத்திலும் தான், ஆனால் நல்லகண்ணுஉள்ளிட்ட மூத்தவர்கள் உத்தரவால் திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது)
புதுவையில் ஒரு காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெற்ற கட்சியாக விளங்கியது. 1980ம் ஆண்டு நடந்ததேர்தலில் 7 இடங்களில் தனித்துப் போட்டியிட்டு அனைத்திலும் இரண்டாவது இடத்தைப் பெற்றது. முன்னணி வேட்பாளர்களைபின்னுக்குத் தள்ளி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
ஆனால் பின்னர் வந்த தேர்தல்களில் கூட்டணி வலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிக்கிக் கொண்டதால் அக்கட்சி வளரமுடியாமல் போய் விட்டது. இந் நிலையில் திமுக கூட்டணியில் நீடித்தால் தாங்கள் விரும்பும் தொகுதிகளும், இடங்களும்கிடைக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலம் பெறுவதற்கேற்ற வகையில் தொகுதிகளை எடுத்துக் கொள்ளும்.மீதமுள்ள இடங்களில் திமுகவும், பாமகவும் அதிக தொகுதிகளைப் பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது. மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியகம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு மொத்தமாக 4 தொகுதிகளே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த எண்ணிக்கை குறையக் கூடியவாய்ப்பையும் மறுக்க முடியாது.
எனவே ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளுக்காக தங்களது உழைப்பை வீணாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே ஒன்று தனித்துப் போட்டியிட வேண்டும் அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப்போட்டியிடலாம் என்ற எண்ணம் அக்கட்சியினர் மனதில் நிலவுகிறது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால் 7 தொகுதிகளைப் பெறுவதில் சிரமம் இருக்காது என்று கட்சியினர்கருதுகிறார்கள். சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக வரும் 26ம் தேதி தேசியக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத்தெரிகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகுமானால் மார்க்சிஸ்ட் கட்சியும் கூடவே விலகும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புதுவையில் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.