ஜெயா பிளஸ் டிவி: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
சென்னை:
ஜெயா டிவியின் சார்பில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள ஜெயா பிளஸ் செய்தி சேனலுக்கு அப்லிங்கிங் வசதிக்கான லைசென்ஸ்தருவது தொடர்பாக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு சென்னைஉயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சன் நியூசுக்குப் போட்டியாக ஜெயா பிளஸ் என்ற 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சி சேவையைத் தொடங்க அனுமதி கோரிமத்திய அரசிடம் விண்ணப்பித்தது ஜெயா டிவி.தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்க அனுமதி தரப்பட்டது. ஆனால், அப்லிங்கிங் எனப்படும் நேரடி ஒளிபரப்புக்கானலைசென்ஸை மத்திய தொலைத் தொடர்புத்துறை (தயாநிதி மாறனின் துறை) வழங்காமல் இருந்து வருகிறது.
இதை எதிர்த்து ஜெயா டிவி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில்,
கடந்த 2004ம் ஆண்டு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம், ஜெயா பிளஸ் தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கவிண்ணப்பம் தரப்பட்டு அதற்கான அனுமதியும் கிடைத்தது.
நேரடி ஒளிபரப்பு வசதிக்காக சொந்தமாக டெலிபோர்ட் அமைத்துக் கொள்ள அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட மனு 2004ம்ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்கப்பட்டு அந்த அனுமதியும் கிடைத்தது.
நேரடி ஒளிபரப்பு வசதியை பயன்படுத்துவதற்கான உரிமத்தை அளிக்கக் கோரி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம்2004ம் ஆண்டு மே மாதம் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால் பலமுறை நேரிலும், கடிதம் மூலமும் வலியுறுத்தியும், நினைவூட்டியும் உரிமம் வழங்காமல் மத்திய தொலைத் தொடர்புத்துறை காலதாமதம் செய்து வருகிறது.
டெலிபோர்ட் அமைப்பதற்கான விலை உயர்ந்த நவீன கருவிகளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து,நிர்மாணிக்கப்பட்டு விட்ட நிலையில் பயன்படுத்த முடியாத நிலையில் அவை முடங்கிக் கிடக்கின்றன.
அப்லிங்கிங் வசதிக்கான உரிமத்தைக் கொடுக்காமல் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் இழுத்தடிப்பு செய்கிறது.உடனடியாக உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ஜெயா டிவியின் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயா டிவியின் கோரிக்கையை சட்ட விதிகளுக்குட்பட்டு உரிய முறையில்பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டது.
மேலும் இதுதொடர்பான இன்னொரு ரிட் மனுவை விசாரணைக்கு அனுமதித்த நீதிமன்றம், அதுதொடர்பாக விளக்கம்அளிக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.