பெண் டாக்டர் புகார்: அமைச்சரிடம் விசாரணை
சென்னை:
சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் கோமதி கொடுத்துள்ள பாலியல் புகார் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய்சுந்தரம் உள்ளிட்ட 24 பேரிடம் விரைவில் சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக் குழு விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றியவர் டாக்டர் கோமதி. இவர் அமைச்சர் தளவாய்சுந்தரம் தன்னிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸில் நடவடிக்கைஎடுக்காததால், உயர்நீதிமன்றத்தை அவர் அணுகினார்.இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நீதிபதி மருதமுத்து தலைமையிலான கமிஷனை உயர்நீதிமன்றம்நியமித்தது. இந்த கமிஷனின் விசாரணைக்காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதைத் தொடர்ந்து பெண் டாக்டர் கோமதியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் விசாரணைக்கமிஷனின் விசாரணைக் காலத்தை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்க டாக்டர் கோமதி கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், விசாரணைக் கமிஷனின் ஆயுள்காலத்தை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்துஉத்தரவிட்டார். இதையடுத்து அமைச்சர் தளவாய் சுந்தரம், சுகாதாரத்துறைச் செயலாளர் ஷீலாராணி சுங்கத், சென்னை மாநகரகாவல் ஆணையர் நடராஜ் உள்ளிட்ட 24 பேரிடம் விசாரணைக் கமிஷன் நேரில் அழைத்து விசாரணை நடத்தவுள்ளது.