அதிமுக.. திமுக..: கார்த்திக் தலை சுத்துது
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. பிப்ரவரி மாதம் இதுகுறித்துஇறுதி முடிவெடுக்கப்படும் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
தமிழக பார்வர்ட் பிளாக் தலைவர் கார்த்திக், விரைவில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேசப்போவதாக அறிவித்திருந்தார்.இந் நிலையில் சென்னை வந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் பிஸ்வாஸ், அதிமுகவுடன் கூட்டணி என்ற கார்த்திக்கின்முடிவை கண்டித்தாகத் தெரிகிறது.
ஏற்கனவே தனது கட்சியின் எம்எல்ஏவாக இருக்கும் சந்தானம் கிட்டத்தட்ட அதிமுக எம்எல்ஏவாகத் தான் செயல்படுகிறார்என்பதால் அவர் மீதும் அதிமுக மீதும் பிஸ்வாஸ் கடுப்பில் இருக்கிறார்.
மேலும் தேசிய அளவில் இடதுசாரிகளின் கூட்டணியில் பார்வர்ட் பிளாக் உள்ளது. இந்தக் கூட்டணி மத்தியில் காங்கிரஸைஆதரிக்கிறது. அதே போல தமிழகத்திலும் இடதுசாரிகளும் காங்கிரசும் இடம் பெற்றுள்ள திமுக கூட்டணியிலேயே நாமும் இருக்கவேண்டும் என பிஸ்வாஸ் கார்த்திக்கிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், தனது ஜாதிரீதியில் சசிகலாவிடம் நெருக்கமாக இருக்கவும், அவர் மூலமாக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவுமேகார்த்திக் விரும்புகிறார்.
இதை பிஸ்வாஸ் விரும்பவில்லை. இந் நிலையில் கார்த்திக்கின் விருப்பத்தையும் மீறி அவரையும் அழைத்துக் கொண்டு திமுகதலைவர் கருணாநிதியை சந்தித்தார் பிஸ்வாஸ்.
இச் சந்திப்பு குறித்து பிஸ்வாஸ் கூறுகையில்,
நாங்கள் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்கிறோம். அந்த வகையில்தான் கருணாநிதியை சந்தித்தோம்.திமுகவுடன் எங்களுக்கு நல்லுறவு உள்ளது. இன்னும் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
கூட்டணி குறித்து அடுத்த மாதம் 10ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் பொலிட் பீரோ கூட்டத்தில் தான் முடிவு செய்யப்படும்.எந்தத் தனி நபரும் (கார்த்திக்) முடிவெடுக்க முடியாது என்றார்.
இதை அருகில் இருந்த கார்த்திக் அமைதியாகக் கேட்டபடி அமர்ந்திருந்தார்.
பின்னர் கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதை நிமித்தமாகவே திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தோம்.இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் ஆகியோரையும்பார்த்தோம்.
சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நான் மட்டும் எடுக்க முடியாது. அதை கட்சியின் மத்திய குழுதான் முடிவுசெய்யும். இப்போதைக்கு கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அடுத்த மாதம் மத்திய குழு கூடி இதுதொடர்பாக இறுதிமுடிவு எடுக்கும். அந்த முடிவை நானே உங்களிடம் சொல்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் (அதிமுக) நாங்கள் கூட்டணி சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. அதுதவறான செய்தி. அந்தக் கட்சியுடன் கூட்டணி சேரப் போவதாக யாரும் (சந்தானம்) தவறாகக் கூறக் கூடாது. அப்படிக் கூறினால்அவர்கள் மீது கட்சி விரோத ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெகா பல்டி அடித்தார் கார்த்திக்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பிரிந்து கிடக்கும் அனைத்து பார்வர்ட் பிளாக் தலைவர்களையும் இணைக்கும் மிகப்பெரிய பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலை மட்டும் முடிந்தால் பிறகு தமிழகத்தில் பார்வர்ட் பிளாக் மிகப்பெரிய அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாறி விடும்.
அந்த நிலைக்கு பார்வர்ட் பிளாக்கைக் கொண்டு வருவதே எனது லட்சியம் என்றார் கார்த்திக்.
இதற்கிடையே தமிழகத்தில் உள்ள பல பார்வர்ட் பிளாக் பிரிவுகளில் 5 பிரிவுகள் கார்த்திக் தலைமையிலான பார்வர்ட் பிளாக்கில்தங்களை இணைத்துக் கொள்ள முன் வந்துள்ளன.