ஆபாச படம்: ஆணையரிடம் குஷ்பு புகார்
சென்னை:
மேக்ஸிம் ஆங்கிலப் பத்திரிக்கையில் தனது ஆபாசப் படம் வெளியிடப்பட்டது குறித்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரிசென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜிடம், நடிகை குஷ்பு புகார் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த குஷ்பு, சமீபத்தில் இன்னொரு சர்ச்சையில் சிக்கினார். லண்டனைச் சேர்ந்த மேக்ஸிம்பத்திரிக்கை தனது இந்தியப் பதிப்பை கடந்த மாதம் வெளியிட்டது.
அந்த இதழில் நடிகை குஷ்புவின் முகத்தை வேறு ஒரு பெண்ணின் கவர்ச்சியான உடலுடன் இணைத்து கிராபிக்ஸ் முறையில்குஷ்புவின் படம் போல பிரசுரித்திருந்தனர்.
மிகவும் ஆபாசமாக வெளியாகியிருந்த இந்தப் படத்தால் குஷ்பு கொதிப்படைந்தார்.
மேக்ஸிம் பத்திரிக்கையை சும்மா விட மாட்டேன் என்று கோபமாக பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு திங்கள்கிழமை இரவு ஆணையரை சந்திக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்துகுஷ்புவிடம் தமிழ்ப் பத்திரிக்கை நிருபர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை என்றுமழுப்பினார்.
அதே சமயம், வட மாநில ஆங்கில மற்றும் இந்தி பத்திரிக்கை நிருபர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள்,புகைப்படக்காரர்களுக்கு மட்டும் தனது சந்திப்பு குறித்து தெளிவாக தெரிவித்து ஆணையர் அலுவலகத்திற்கு வரச்சொல்லியிருந்தார். இந்தத் தகவல் எப்படியோ தமிழ்ப் பத்திரிக்கை நிருபர்களுக்கு கசிந்து விடவே, அத்தனை பேரும் ஆணையர்அலுவலகத்தில் குவிந்து விட்டார்கள்.
மாலை ஆறரை மணிக்கு ஆணையர் அலுவலகத்திற்கு வந்த குஷ்பு தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் குவிந்திருப்பதைக் கண்டுஅதிர்ந்தார். இருப்பினும் அதை முகத்தில் காட்டாமல் நேராக ஆணையரை சந்தித்தார். சுமார் கால் மணி நேர சந்திப்புக்குப்பின்னர் வெளியே வந்த அவர் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதைத் தவிர்த்தார். இப்போது எதுவும் கூற முடியாதுஎன்று ஆங்கிலத்தில் கூறியபடி நழுவ முயன்றார்.
இருப்பினும் தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் அவரை விடவில்லை. இதையடுத்து ஆங்கிலத்திலும், பத்திரிக்கையாளர்கள் மிகவும்வலியுறுத்தியதால் தமிழிலும் சிறிது நேரம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், எனது படத்தை ஆபாசமாக பிரசுரித்தமேக்ஸிம் பத்திரிக்கை ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆணையரிடம் மனுகொடுத்தேன்.
பத்திரிக்கையின் பதிப்பாளர் சேவியல் கலோனல் என்னை சந்திப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அவர் வரவில்லை.அவரது மன்னிப்பை நான் ஏற்கவில்லை. அதை ஏற்கவும் மாட்டேன்.
சட்டப்பூர்வமான நடவடிக்கையைத் தவிர வேறு நடவடிக்கைகளுக்கு நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். ஆணையரிடம்புகார் கொடுத்ததோடு, நீதிமன்றத்திலும் கிரிமினல் வழக்கு தொடரவுள்ளேன் என்று கூறி விட்டு வேகம் வேகமாக அங்கிருந்துசென்று விட்டார்.
பெண் அதிரடிப்படை போலீஸாரின் மிக பலத்த பாதுகாப்புடன் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த குஷ்பு, அதே பாதுகாப்போடுபத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.
குஷ்பு மனு மீது உடனடி நடவடிக்கை:
நடிகை குஷ்பு கொடுத்துள்ள மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆணையர் நடராஜ்தெரிவித்துள்ளார். குஷ்புவின் மனு குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடிகை குஷ்புவின் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
சம்பந்தப்பட்ட பத்திரிக்கை எங்கிருந்து வெளியாகிறது என்ற முகவரி பத்திரிக்கையில் இல்லை. இது சட்டப்படி குற்றமாகும்.மும்பையிலிருந்து வெளியாகும் அந்தப் பத்திரிக்கையின் விலை ரூ.100 ஆகும். ஆனால் சென்னையில் இதை ரூ. 60க்குவிற்றுள்ளார்கள்.
அந்தப் பத்திரிக்கை உடனடியாக சென்னையில் பறிமுதல் செய்யப்படும், விற்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. குஷ்பு கொடுத்தபுகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 292, 294, 509 மற்றும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 4ன் கீழ்நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரியுள்ளார் குஷ்பு. அந்த நடவடிக்கையும் இருக்கும் என்றார் ஆணையர்.
பெண்களின் கற்பு நிலை குறித்து பேசியது தொடர்பான வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் குஷ்புவைக் கைதுசெய்யாமல் மேட்டூர் நீதிமன்றத்தில் வேடிக்கை பார்த்த போலீஸார் தற்போது குஷ்பு கொடுத்துள்ள புகாரின் பேரில் படுவேகமாகநடவடிக்கையில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.