சென்னையில் போட்டியிடுவாரா விஜயகாந்த்?
சென்னை:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சென்னையில் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என்று கோரி ஏராளமான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் இன்று முதல் விண்ணப்பங்களைப் பெற்று வருகிறது.சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்தின் திருமண மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் விண்ணப்பங்களை அளித்தனர்.
சென்னையில் உள்ள அண்ணா நகர், ஆர்.கே.நகர், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் விஜயகாந்த் போட்டியிடக் கோரி 3 பேர் விண்ணப்பம் அளித்தனர். தலா ரூ. 10,000 கட்டி இந்த விண்ணப்பங்களை விஜயகாந்த் கட்சிப் பிரமுகர்கள் வழங்கினர்.
கட்சியினர் வழங்கிய விண்ணப்பங்களை அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். வரும் 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திலும் இன்று விண்ணப்பங்களை வழங்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது.