இடப் பகிர்வு: திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கெடு
சென்னை:
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி விரைவில் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும்,மெளனமாக இருப்பது நல்லதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
சமீபத்தில் மதுரையில் வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் தொடர்பானபேச்சுக்கள் சீராகவும், சிறப்பாகவும் இல்லை என்று விமர்சித்திருந்தார். குறைந்த அளவிலான தொகுதிகள் கொடுக்கப்பட்டால்அதை ஏற்க மாட்டோம் என்றும் கூறியிருந்தார்.வரதராஜனின் இந்தப் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக குறிப்பிட்ட சில கட்சிகளுடன் மட்டும் திமுகதலைமை பேசி வருவதை இது உறுதிப்படுத்தியது. இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன்,
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் சிறப்பு மாநாடு வரும் 18ம் தேதி மதுரையில் நடக்கிறது. இந்த மாநாடு தேர்தல் களத்தின்முன்னோடி மாநாடாக இருக்கும். ஜனநாயகம் பாதுகாக்க அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் இதுவே எங்கள் தேர்தல்பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கும். சட்ட சபை தேர்தலை முன்னிட்டே அதிமுக அரசு பல சலுகைகளை வழங்குவதாககருதுகிறேன் என்றார்
மேலும் அவர் கூறுகையில், திமுக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள்நிலவுகின்றன. ஒரு கதவு திறந்தால் இன்னொரு கதவு திறக்கும் என்கிறார் வைகோ. கூட்டணிக்கு எங்களது கதவுகள் எப்போதும்திறந்தே இருக்கும் என்கிறார் ஜெயலலிதா. இதெல்லாம் என்ன?
எனவே இனியும் இந்த விஷயத்தில் திமுக மெளனமாக இருக்கக் கூடாது. உடனடியாக திமுக கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசிதொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவை அறிவிக்க வேண்டும்.
நாங்கள் வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மாநிலக் குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். அப்போது எத்தனை தொகுதிகளில்போட்டியிடுவது என்பது குறித்துப் பேசவுள்ளோம். எங்களது கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள 25 தொகுதிகளைப் பட்டியலிட்டுஅதன் அடிப்படையில் திமுகவிடம் தொகுதிகள் கேட்போம். 8ம் தேதியே திமுகவுடன் பேசவுள்ளோம் என்றார் வரதராஜன்.
இதை தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு வரதராஜன் அளித்த பதிலாவது:
கே. கூட்டணி குறித்து கருத்து தெரிவிப்பது கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுத்தாதா?
ப. கூட்டணி கருத்து வேறுபாட்டை நயம்பட தெரிவிப்பதை தவிர்க்க மாட்டோம்.
கே. இப்போது இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று கேட்ட நீங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்ட வைத்த போது ஏன்கேட்கவில்லை?
ப. பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது, அதனால் கடுங்கோபத்தில் இருந்ததால் தொகுதியை பற்றி கவலைப்படாமல்அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம்.
கே. தமிழக சட்டசபை தேர்தலில் 3வது அணி உருவாக சாத்தியம் உண்டா?
ப. அகில இந்திய அளவில் கொள்கை கொண்ட 3வது அணி உருவானால் மகிழ்ச்சியடைவோம். அதுதான் எங்களது நோக்கமும்.அதற்கான சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்க்கிறோம். வரும் தேர்தலில் 3வது அணி அமைய வாய்ப்பில்லை.
கே. கூட்டணியை பாதுகாக்கும் பொறுப்பு கூட்டணி கட்சிகளுக்கும் உண்டு என்று கருணாநிதி கூறியுள்ளாரே?
ப. மிகப் பெரிய பொறுப்பை நிறைவேற்றும் கட்டத்தில் திமுக உள்ளது.
கே. கூடுதல் சீட் கிடைக்காத பட்சத்தில் அதிமுகவுடன் சேர வாய்ப்புள்ளதா?
ப. எந்த சூழ்நிலையிலும் அதிமுக அணியில் சேர மாட்டோம் என்றார் வரதராஜன்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக வைகோவோடு வரதராஜனும் அடுத்தடுத்து நெருக்குதல் தர ஆரம்பித்துள்ளதால் அது குறித்துமுடிவெடுக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications