கரடியும் அப்பாவி வைகோவும்-ஜெ சொன்ன கதை
சென்னை:
அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா ஏகப்பட்ட கதைகள் சொன்னார். அதில் ஒரு கதை கரடிக் கதை. இது திமுககூட்டணியில் உள்ள வைகோ, இடதுசாரிகளுக்காக சொல்லப்பட்ட கதை.
சரி.. இப்போ கதை கேட்போம்.அது ஒரு மழைக்காலம். ஆறுகளில் புதுவெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. காட்டை ஒட்டியிருந்த ஓர் ஊரின் ஆற்றங்கரை ஓரத்தில்நான்கு நண்பர்கள் இந்தப் பெருவெள்ளத்தில் எவ்வாறு அக்கரைக்குச் செல்வது என்ற சிந்தனையோடு நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது நட்ட நடு ஆற்றில் கருமையான நிறத்தில் மூட்டை போல ஒன்று மிதந்து வந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள்.
அதில் ஒருவன், அதோ அங்கே மிதந்து வருவது என்னவென்று பாரப்பா என்றான். இன்னொருவன் அது ஒரு கம்பளி போலதெரிகிறதே என்றான். மூன்றாமவன் கம்பளியே தான் என்றான். மிகவும் தைரியசாலியான நான்காவது ஆள், அதை எடுத்துப்பிழிந்து காய வைத்தால், இந்த மழை காலத்திற்கு இரவில் இதமாக இருக்கும் என்று கூறி ஆற்றில் குதித்தான்.
வேகமாக நீந்திச் சென்ற அவன் காட்டாற்று வெள்ளத்தில் மிதந்து வந்த கம்பளியைத் தாவிப் பிடித்தான். தாவிப் பிடித்த சிறிதுநேரத்தில், அந்த கம்பளியுடன் சேர்ந்து, நட்டாற்றில் அவனும் வெள்ளத்தின் போக்கில் போக ஆரம்பித்தான்.
இதைப் பார்த்த 3 பேரும், கம்பளியை இழுத்துக் கொண்டு கரைக்கு வா என்று கத்தினார்கள். ஆனால் அவனால் அந்தக்கம்பளியை விட்டு வர முடியவில்லை. நண்பா, அந்த கம்பளியை விட்டு விடு, நீ மட்டுமாவது வந்து சேர் என்று நண்பர்கள்கத்தினார்கள்.
அதற்கு நட்டாற்றில் மிதந்தவன் சொன்னான். நான் எப்போதோ கம்பளியை விட்டு விட்டேன். ஆனால் அதுதான் என்னை விடமாட்டேன் என்கிறது என்றான்.
உண்மையில் ஆற்றில் மிதந்து வந்தது கம்பளி அல்ல, கரடி. அந்தக் கரடி கன மழை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தது. ஏதாவது பற்று கிடைக்காதா, எப்படியாவது கரை சேர முடியாதா, யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்றுஎண்ணியபடி போய்க் கொண்டிருந்தது.
இப்படி நான்கு பேர் ஆற்றங்கரையில் இருப்பதைப் பார்த்த கரடி, தனது உடலை கம்பளி போல சுருட்டிக் கொண்டு அவர்களைஏமாற்றி விட்டது.
ஆனால் நம் ஆள் அவ்வளவு ஏமாளி இல்லை. என் கைகளைத்தானே பிடித்துக் கொண்டாய் என்று கூறி தனது கால்களைப்பயன்படுத்தி எப்படியோ தப்பித்துக் கரை சேர்ந்தான். இந்தக் கதையில் கரடி யார், அப்பாவி நண்பர்கள் யார் என்பதை உங்களதுயூகத்திற்கே விட்டு விடுகிறேன் என்றார் ஜெயலலிதா.
இதில் திமுக தான் கரடி. கரடியிடம் மாட்டி கரை சேர்ந்த அப்பாவி நண்பன் வைகோ. கரையில் நின்றவர்கள் இடதுசாரிகள்.
அப்போ ஆத்து வெள்ளம்?