இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் பார்த்தால் வரி.. இதென்ன சார் அநியாயமா இருக்கு.. சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!
சென்னை: இந்திய இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிப்பதால், அதற்கு அடிமையாகி வருவதாகக் மத்திய அரசு கூறுகிறது. உலகில் பல நாடுகளில் மொபைல் போன் பயன்படுத்தவும், சமூக ஊடகங்களை பயன்படுத்தவும் பல கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. ஆனால் இது பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை என்பது பொதுவான வாதமாக உள்ளது.
இந்த நிலையில் சமூக ஊடக தளங்களை இளைஞர்கள் பயன்படுத்துவதை குறைக்க மத்திய அரசு புதிய வரி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு அதற்கான ஆலோசனையில் இறங்கியுள்ளது என சார்த்தக் அஹுஜா தெரிவித்துள்ளார்.

மக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு ஜிபி (GB) மொபைல் இண்டர்நெட் பயன்பாட்டுக்கும் 1 ரூபாய் வரி விதிக்கும் திட்டத்தை ஆய்வு செய்ய பிரதமர் அலுவலகம் (PMO) தொலைத்தொடர்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வு தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்காக டெலிகாம் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வரி அமலுக்கு வந்தால் சாமானிய மக்களின் மொபைல் பில் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சராசரியாக மாதத்துக்கு குறைந்தது 30 ஜிபி தரவு (Data) இந்திய மக்கள் பயன்படுத்துகிறார். இந்த வரி வந்தால் மாதாந்திர மொபைல் பில் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த வரி டெலிகாம் நிறுவனங்கள் வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 25,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள், கேம்ஸ், பொழுதுபோக்கு தளங்கள் ஆகியவை 'உற்பத்தித்திறன் இல்லாத' தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை குறைக்க இந்த வரி உதவும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் சவால்கள் உள்ளன. ஒருவர் பயன்படுத்தும் மொபைல் டேட்டாவில் எது கல்விக்காக, எது வங்கி பரிவர்த்தனைக்கு, எது பொழுதுபோக்குக்காக என்று எப்படி பிரிப்பது என்பதில் பெரும் சிக்கல் உள்ளது. கல்வி, சுகாதாரம், நிதி சேவைகள் போன்ற அத்தியாவசிய பயன்பாடுகளுக்கும் வரி விதிக்கப்படுமா? இந்தக் கேள்விகளுக்கான பதிலில் இன்னும் தெளிவு இல்லை.
இந்தியாவில் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வரி திட்டம் இளைஞர்களின் எதிர்காலத்தையும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் பாதிக்கும் என்று பலரும் அஞ்சுகின்றனர். இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு இந்த வரியை அமல்படுத்தினால் இந்திய மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருக்கும்.














Click it and Unblock the Notifications