ஆந்திரா மீது வழக்குத் தொடர்ந்தது தமிழக அரசு
டெல்லி:
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே கணேசபுரம் என்ற இடத்தில், பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் ஆந்திர அரசு படு வேகமாக இறங்கியுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டால், வட தமிழகம் பாலைவனமாகி விடும்.எனவே, அணை கட்டும் திட்டத்தை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. ஆந்திர அரசின் திட்டத்தை எதிர்த்து வட மாவட்டங்களில் தினசரி ஒரு போராட்டம் நடந்து வருகிறது.
ஆந்திர அரசின் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தமிழக தல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த மனுவில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டினால், தமிழகத்தின் வட பகுதி முழுவதும் வறண்டு போய் பாலைவனமாகி விடும்.
மேலும், பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசுக்கு உரிமை இல்லை. எனவே இந்தத் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.