வாசன் மாற்றம்: தலைவராகும் வன்னிய பிரமுகர்
சென்னை:
திண்டிவனம் ராமமூர்த்தி ஏற்படுத்தியுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.வாசன் மாற்றப்படுகிறார். அவருக்குப் பதில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பியும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் சம்பந்தியுமான கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். திமுகவின் நெருக்கடியே இதற்குக் காரணம் என திண்டிவனம் ராமமூர்த்தி தொடர்ந்து கூறி வருகிறார்.இதையடுத்து திண்டிவனம் ராமமூர்த்தியிடம் 2 முறை விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதிமுக கூட்டணியில் சீட் வாங்கும் முடிவில் உள்ள திண்டிவனம் இதை பொருட்படுத்தவில்லை.
அதேசமயம், திண்டிவனம் ராமமூர்த்தி எழுப்பும் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விட்டால் வன்னியர்கள் மத்தியில் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படலாம் என காங்கிரஸ் மேலிடம் அஞ்சுகிறது. அதிமுகவுடன் திண்டிவனம் கைகோர்த்தால் வன்னியர் பெல்டில் காங்கிரசுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் சரிவு ஏற்படும் என டெல்லி அஞ்சுகிறது.
இதைத் தொடர்ந்து கட்சித் தலைவரை மாற்றி விட மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்தப் பதவியைப் பிடிக்க ஜெயந்தி நடராஜன், மத்திய அமைச்சர் இளங்கோவன், நீலகிரி எம்பி பிரபு, குமரி அனந்தனின் தம்பி ஒயிட்-அண்ட்-ஒயிட் வசந்தகுமார், மாஜி இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்ல குமார் ஆகியோர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
ஆனால், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கட்சித் தலைவராக நியமித்தால் திண்டிவனத்தையும் அதிமுகவின் திட்டத்தையும் கவுண்டர் செய்துவிட முடியும் என காங்கிரஸ் கருதுகிறது.
எனவே விரைவில் வாசன் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் முன்னாள் எம்.பி. கிருஷ்ணமூர்த்தியை தலைவர் பதவியில் அமர்த்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
வாசனிடம் ஏற்கனவே ராஜினாமா கடிதம் பெறப்பட்டு விட்டதாகவும், புதிய தலைவர் நியமனம் சில நாட்களில் அறிவிக்கப்படக் கூடும்என்றும் தெரிகிறது.
புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ள கிருஷ்ணமூர்த்தியின் மகன் விஷ்ணு பிரசாத் தற்போது மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். விஷ்ணு, ராமதாசின் மருமகனாவார்.
ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தால் கட்சியில் உள்ள மற்ற சமூகத்தினரின் அதிருப்தி ஏற்படலாம் என்பதால் விஷ்ணு பிரசாத்தை அகில இந்திய பொறுப்புக்கு மாற்றி விடவும் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.