சீட்: அதிமுகவில் 13,000- திமுகவில் 8,000
சென்னை:
அதிமுக சார்பில் மங்களூர் (தனி) தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, அவரது மகன், மருமகள் ஆகியோர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதுவரை அதிமுகவில் சீட் கேட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் 13,000த்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
திமுக, அதிமுக, விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகிய கட்சிகள் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தங்களது கட்சியினரிடமிருந்து மனுக்களைப் பெற்று வருகின்றன. அதிமுக கடந்த 1ம் தேதி முதலும், திமுக 3ம் தேதி முதலும் மனுக்களைப் பெற்று வருகின்றன. இரு கட்சியிலும் விண்ணப்பங்களை வழங்க இன்றுதான் கடைசி நாள்.கடைசி நாள் என்பதால் இரு கட்சி தலைமை அலுவலகங்களிலும் கூட்டம் கட்டி ஏறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அதிமுக தலைமைக் கழக அலுவலகம் உள்ள பகுதி முழுவதும் அதிமுக தொண்டர்கள் திருவிழா கூட்டம் போல குவிந்திருந்தனர்.
அதிகாலை முதலே விண்ணப்பங்களை வழங்கினர். இரவு 8 மணி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 13,000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாம். கூட்டம் அதிக அளவில் உள்ளதால் ஓரிரு நாட்கள் காலக்கெடு நீட்டிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
ஜெயலலிதாவுக்கு சீட் கேட்டு மட்டும் 2,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மங்களூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, அவரது மகன் அய்யாசாமி, மருமகள் உமா மகேஸ்வரி ஆகிய 3 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இதேபோல, சமீபத்தில் சாலை விபத்தில் இறந்த தஞ்சை மாவட்ட அதிமுக செயலாளர் கொற்கை மதியழகனின் மனைவி சுலோச்சனா, அவரது தம்பி துரை இளங்கோவன் ஆகியோர் கும்பகோணம் தொகுதியைக் கேட்டு விண்ணப்பம் வழங்கினர்.
திமுகவில்...
திமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள் முல்லைவேந்தன், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இன்று பிற்பகல் வரை 8,000 பேர் மனு கொடுத்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் சட்டசபை தொகுதி திமுக உறுப்பினரான நடிகர் நெப்போலியன் இந்த முறை திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட சீட் கோரி விண்ணப்பம் அளித்துள்ளார்.
அதேபோல, எம்.ஜி.ஆர். நகர் கூட்ட நெரிசல் சாவு தொடர்பாக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுன்சிலர் தனசேகரன், ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட சீட் கோரி மனு அளித்துள்ளார்.
எம்ஜிஆர் நகர் ஆலந்தூர் தொகுதியில் தான் வருகிறது. அங்கு அமைச்சர் வளர்மதி அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அவரது பரம எதிரியான தனசேகரன் அதே தொகுதியில் திமுக சார்பில் சீட் கேட்டுள்ளார்.
தாமரைக்கனியின் மகன் தங்கமாங்கனி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்பி விண்ணப்பம் அளித்துள்ளார்.
கருணாநிதி, ஸ்டாலினுக்காக 500க்கும் மேற்பட்ட மனுக்களை திமுகவினர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய்காந்த் கட்சி:
விஜய்காந்தின் தே.மு.தி.க. சார்பில் விண்ணப்பம் அளிக்க 24ம் தேதி கடைசி நாளாகும். அங்கு பெரிய அளவில் கூட்டம் காணப்படவில்லை. இதுவரை எத்தனை பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர் என்ற தகவலை அக்கட்சி தெரிவிக்க மறுக்கிறது.