அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி.. வழக்கை நிரந்தரமாக முடித்து வைத்தது அமெரிக்க நீதிமன்றம்
வாஷிங்டன்: தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீது தொடரப்பட்டிருந்த குற்றவியல் வழக்குகளை அமெரிக்க நீதித்துறை முழுமையாக கைவிட்டுள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த பங்கு மோசடி மற்றும் பண மோசடி தொடர்பான வழக்குகளும் நிரந்தரமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இதனால் கடந்த சில மாதங்களாக அதானி குழுமத்தை சுற்றியிருந்த சட்ட சிக்கல்கள் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலைக்கு முடிவு கிடைத்துள்ளது. இந்த முடிவு முதலீட்டாளர்களுக்கும் அதானி குழுமத்திற்கும் பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோர் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,450 கோடி) லஞ்சம் கொடுத்ததாகவும், இந்த விவரங்களை அமெரிக்க முதலீட்டாளர்கள் மறைத்து கடன் திரட்டியதாகவும் கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது.
இதை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்தது. இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை நீதித்துறை தாக்கல் செய்தது. அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் தொடுத்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதானி குழுமம் கடந்த மாதம் அமெரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த விவகாரத்தில் கௌதம் அதானி 6 மில்லியன் அமெரிக்க டாலரும், சாகர் அதானி 12 மில்லியன் அமெரிக்க டாலரும் செலுத்த ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர்கள் எந்த குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. இதேபோன்று ஈரானில் இருந்து எல்பிஜி இறக்குமதி தொடர்பான அமெரிக்க தடைகள் மீறப்பட்டதா என்ற விசாரணையும் நடைபெற்றது. இதில் அதானி குழுமம் முழுமையாக ஒத்துழைத்தது.
இந்த நிலையில், இவ்வழக்கில் அமெரிக்காவுடன் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்ய கோரினர். அதேபோல் அதானி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் குழு, இந்த விவகாரம் முற்றிலும் இந்தியாவிற்குள் நடந்தது என்றும், இதில் அமெரிக்க சட்டங்கள் தலையிட முடியாது என்றும் வாதிட்டனர். மேலும், முதலீட்டாளர்களுக்கு நேரடி இழப்பு ஏற்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும், அதானி அல்லது சாகர் அதானி மீது நேரடி மோசடி நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து அரசு தரப்பின் வாதங்களை ஏற்றுக்கொண்ட அமெரிக்க நீதிமன்றம், அதானி மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை நிரந்தரமாக தள்ளுபடி செய்வதாகவும் அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது. அதாவது இந்த வழக்கு தள்ளுபடி வித் பிரெஜுடிஸ் என்ற சட்டப்பிரிவின் கீழ் செய்யப்பட்டு உள்ளது.
அதாவது இனி இந்த ஆதாரங்களைக் கொண்டு அதானிக்கு எதிராக இந்த வழக்கை அமெரிக்காவில் மீண்டும் ஒருபோதும் தொடங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதானி குழுமத்தின் மீது சர்வதேச அளவில் இருந்த சட்டச் சிக்கல்கள் அனைத்தும் முழுமையாக நீங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications