பாமக-சிறுத்தைகள் நட்பை கெடுக்க சதி- திருமா
சென்னை:
பாமகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே நிலவும் நல்லுறவைக் கெடுக்க சிலர் (திமுக?) சதி வேலையில் ஈடுபட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் தமிழ் ஈழ பாதுகாப்பு மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழ் தேசியவாத ஆதரவாளர் தியாகு, பாடலாசிரியர் அறிவுமதி, பாமக மத்திய சென்னை செயலாளர் ஏழுமலை, இயக்குனர் தங்கர்பச்சான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.திருமாவளவன் பேசுகையில், விடுதலைச் சிறுத்தைகளுக்கும், பாமகவுக்கும் இடையே நிலவும் நல்லுறவை பலர் விரும்புகிறார்கள், வரவேற்றுள்ளனர். ஆனால் சிலருக்கு இது பிடிக்கவில்லை. எங்களைப் பிரித்து விட வேண்டும் என்று அவர்கள் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை மட்டுமே விரும்பும் அந்த சிலர்தான், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான எதிரிகள். அவர்களுக்கு தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் வருகிற சட்டசபைத் தேர்தலில் கடும் பாடம் புகட்டுவார்கள்.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் மாறியுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை என்றைக்குமே விடுதலைச் சிறுத்தைகள் கைவிட்டதில்லை. எங்களது கொள்கைகளில் நாங்கள் என்றைக்குமே சமரசம் செய்து கொண்டதில்லை.
சாதிகளற்ற சமுதாயத்தை படைப்பது, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகத்தான் நாங்கள் எங்களது அமைப்பை தொடங்கினோம்.
பாமகவுடன் இணைந்து இதை சாதிக்க மடியும் என்பதால்தான் பாமகவுடன் உறவு கொண்டுள்ளோம். இந்த ஒற்றுமையை சிலர் விரும்பவில்லை. இதனால் தான் எங்களை கூட்டணியில் சேர்கக் வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி பலமுறை கோரியும் அதை ஏற்க மனமில்லாமல் சிலர் (திமுகவே தான்) உள்ளனர்.
இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு எந்த உதவியையும் செய்யக் கூடாது. ராணுவரீதியிலான அந்த உதவிகள் தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் என்றார் திருமாவளவன்.
கூட்டத்தில் பேசிய நெடுமாறன், கி.வீரமணி உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் இலங்கைத் தமிழர் விஷயத்தில் மத்திய அரசின் போக்கை கண்டித்தனர். மேலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு திமுக கூட்டணியில் இடம் அளிக்கப்படாதது கண்டனத்துக்குரியது என்றனர்.












Click it and Unblock the Notifications