திமுகவில் மீண்டும் சண்டை-விஜயகாந்த் நம்பிக்கை
சேலம்:
திமுக கூட்டணியில் பிரச்சினை அடங்கியிருப்பதைப் போலத் தோன்றினாலும் மீண்டும் பெரிய அளவில் பிரச்சினை உருவாகும் என்று தேசிய முற்போக்குத் திராவிட கழகத் தலைவரான நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சேலம் அருகே உள்ள மல்லூர் என்ற இடத்தில் விஜயகாந்த் கூடியிருந்த திரளான தொண்டர்களிடையே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,நான் எம்.ஜி.ஆரை எனது குருநாதராக ஏற்றவன், காமராஜர் கொள்கையால் கவரப்பட்டவன்.
எம்.ஜி.ஆர். தொடங்கிய காதுகேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் ரூ. 50,000 நிதியுதவி செய்கிறேன். அதனால் மனம் கவரப்பட்டுத்தான் எனக்கு எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்த வேனை ஜானகி அம்மாள் எனக்குக் கொடுத்தார்.
இன்று, திமுகவும், அதிமுகவும் நானா, நீயா போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் தனிக்காட்டு ராஜா போல செயல்படுகின்றன.
இந்தக் கட்சிகளுடன் பல கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்கின்றன. இந்த இரண்டு கட்சிகளை விட்டால் வேறு கட்சியே இல்லை என்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.
இது மாற வேண்டும். எம்.ஜி.ஆருக்குப் பின்னர் வேறு யாரும் 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்ததில்லை. திமுகவும், அதிகவும் ஆளுக்கு ஐந்து ஆண்டுகள் என்ற ரீதியில் மாறி மாறி ஆட்சி புரிகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை நல்லாட்சி நடைபெறவில்லை. நடந்திருந்தால் நான் வந்து ஓட்டுக் கேட்க மாட்டேன்.
காமராஜர் ஆட்சி என்று பேசியவர்கள் இன்று சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள்.
தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் தங்களது தனித்தன்மையை இழந்து கூட்டணிக் கட்சிகளை தேடிக் கொண்டு இருக்கின்றன.
இப்போதுதான் ஒரு (திமுக) கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. இருந்தாலும் மீண்டும் பிரச்சினை வரும். இது உறுதி.
இரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும், ஓட்டுப் போடக் கூடாது, மாற்று ஆட்சியைக் கொடுத்தால்தான் மக்களுக்கு நல்லது. அந்த மாற்றுக் கட்சியாக தே.மு.தி.க. விளங்கும் என்றார் அவர்.
வழக்கமாக திமுக தலைவர் கருணாநிதியையும் மத்திய அமைச்சர் பாலுவையும் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசி வந்த விஜய்காந்த் இப்போது அதைக் குறைத்துக் கொண்டு திமுக, அதிமுகவை சரி சமமாகத் தாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்காந்தின் கல்யாண மண்டபத்தை இப்போதைக்கு இடிக்கப் போவதில்லை என அவருக்கு டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications