ஏ.சி.சண்முகம் கல்லூரிக்கு அங்கீகாரம் திடீர் ரத்து
சென்னை:
கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கல்லூரியைக் கட்டி சிக்கலில் மாட்டி தலைமறைவாக உள்ள ஏ.சி.சண்முகத்திற்குச் சொந்தமான எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரிக்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ரத்து செய்து விட்டது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
சென்னை மதுரவாயல் பகுதியில் ஏ.சி.சண்முகத்திற்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த வளாகத்தில், எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி உள்ளது.கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதால் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.
இதுதொடர்பாக ஏ.சி.சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதிலிருந்து தப்ப தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் ஏ.சி.சண்முகம்.
இந் நிலையில் இன்னொரு சிக்கலாக, எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரிக்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ரத்து செய்து விட்டது. இதனால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்தை அவர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு வெளியே வந்து போராட்டத்தில் குதித்தனர்.
அங்கீகாரம் பெறாமல் வகுப்புகளை நடத்தக் கூடாது, அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும், உடனடியாக அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டியது மிக அவசரமான அவசியம்.