விரைவில் அதிமுக வேட்பாளர் நேர்காணல்
சென்னை:
அதிமுக சார்பில் போட்டியிட மனு செய்துள்ளவர்களிடம் விரைவில் நேர்காணல் தொடங்கவுள்ளது.
அதிமுக சார்பில் தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 13,000 பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் தற்போது மாவட்ட வாரியாக வரிசைப்படுத்தி பிரிக்கப்பட்டு வருகின்றன.இன்னும் ஓரிரு வாரங்களில் நேர்காணல் தொடங்கும் எனத் தெரிகிறது. அத்தனை பேரையும் அழைத்து நேர்காணல் நடத்தினால், கால தாமதம் ஆகும் என்பதால், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்வு செய்யப்படும் 5 முதல் 10 பேரை மட்டுமே அழைத்து நேர்காணல் நடத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நேர்காணலின்போது ஜெயலலிதாவுக்கு உதவியாக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு உடனிருக்கும். நேர்காணல் முடிந்தவுடன் மார்ச் மத்தியில் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது.
மதிமுக வராது என்றாகி விட்டதால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க இப்போது எந்த பெரிய கட்சியும் இல்லை.
திண்டிவனம் ராமமூர்த்தி-கேரள கருணாகரன்-புதுவை கண்ணன் கூட்டுத் தயாரிப்பான தமிழக இந்திரா காங்கிரசுக்கு சில சீட்கள், இன்னொரு வன்னியர் தலைவரான தீரனைக் கொண்டு உருவாகப் போகும் கட்சிக்கு ஓரிரு சீட்கள், நாடார் இன பிரமுகர் ராக்கெட் ராஜாவைக் கொண்டு உருவாகும் கட்சிக்கு ஒரு சீட் தரப்படலாம்.
விஜய. டி.ரஜேந்தருக்கு ஒன்று, அதிமுகவுக்காக கட்சியை உடைத்த பார்வர்ட் பிளாக் சந்தானத்துக்கு ஒன்று என இரு சீட்கள் தரப்படவுள்ளன.
கருணாநிதியுடன் மோதிக் கொண்டே பாமக உதவியுடன் திமுக கூட்டணியில் இடம் பிடிக்க முயலும் விடுதலைச் சிறுத்தைகளை வளைக்கும் வேலையும் ஒரு பக்கம் நடக்கிறது. அதே போல விஜய்காந்தைக் கூட்டணியில் சேர்க்கவும் முயற்சி நடக்கிறது.
அவர்கள் வந்தால் பெரிய அளவில் இடப் பகிர்வு இருக்கும்.
அதே போல கடைசி நேரத்தில் பாஜகவையும் கூட்டணியில் அதிமுக சேர்க்கலாம். அப்படி நடந்தால் அவர்களுக்கும் 5 இடங்கள் தரப்படலாம். அந்த கடைசி நேரத்துக்காக ஆவோலாடு காத்திருக்கிறது பாஜக.