தமிழக காங்கிரசில் இன்னொரு பிளவு!
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் தங்களது சங்கத்திற்கு போதிய பிரதிநிதித்துவம் தரப்படாததால், வரும் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி. அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவுதான் ஐ.என்.டி.யூ.சி. இந்த சங்கத்திலிருந்து வந்த வாழப்பாடி ராமமூர்த்திதான் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவரானார். மிகவும் பாரம்பரியம் மிக்க பின்னணியைக் கொண்ட ஐ.என்.டி.யூ.சியைச் சேர்ந்த சிலருக்கு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளிப்பது வழக்கம்.இந் நிலையில் சமீப காலமாக தங்களுக்கு சரியான வாய்ப்புகளைத் தராமல் காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக ஐ.என்.டி.யூ.சியின் பொதுச் செயலாளர் ஜி.காளன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமாக இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது. 6 லட்சம் உறுப்பினர்கள் இதில் உள்ளனர். 25 லட்சம் பேர் கொண்ட வலுவான ஓட்டு வங்கியாகவும் இது திகழ்கிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எங்களுக்குரிய கெளரவத்தை, மரியாதையை காங்கிரஸ் கட்சி தரவில்லை. எங்கள் தொழிற்சங்கத்துக்குரிய பிரதிநிதித்துவத்தையும் தருவதில்லை.
இதனால் நாங்கள் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.
காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற, அனைத்துப் பொறுப்புகள் மற்றும் குழுக்களில் ஐ.என்.டி.யூ.சி.க்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் அரசியல் இயக்கமாக எங்களது சங்கம் தனித்துவத்துடன் செயல்படும். எங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளோடு கூட்டணி வைக்கும் நிலை ஏற்படும்.
இந்த முடிவின் அடிப்படையில் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், நஞ்சப்பன் உள்ளிட்டோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி எங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை அளிக்க மறுத்தால், அதிமுக, தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் (திண்டிவனம் கட்சி), விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகிய யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம்.
அவர்களுடன் கூட்டணி அமைப்போம். இல்லாவிட்டால் தனியாக போட்டியிடுவோம்.
எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் காங்கிரஸில் இருப்பதும், வெளியேறுவதும் காங்கிரஸ் கட்சியின் கையில்தான் உள்ளது என்றார் காளன்.
ஏற்கனவே திண்டிவனம் ராமமூர்த்தி மூலமாக காங்கிரஸை உடைத்துவிட்ட அதிமுக காளன் மூலமாக இன்னொரு பிளவை உருவாக்க முயல்வதாக காங். தலைமை கருதுகிறது.
இதைச் சமாளிக்க அவசரமாக சில திரைமறைவு வேலைகளில் காங்கிரஸ் தலைமை இறங்கியுள்ளது.
ஐஎன்டியூசியின் தேசியத் தலைமை மூலமாக காளனை வழிக்குக் கொண்டு வர முயற்சி நடக்கிறது.












Click it and Unblock the Notifications