கூட்டணி ஆட்சி: தேர்தலுக்கு பின் காங் திட்டம்?
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் பழைய, வயதான, பலமுறை பதவி வகித்து விட்ட பிரமுகர்களுக்கு வாய்ப்பளிப்பதை விட புதுமுகங்களுக்கு அதிக அளவில் சீட் தர காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் 60 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ளது. இந்த பட்டியலை திமுக தலைவர் கருணாநிதியிடம், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்பமொய்லி, கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அளித்தனர்.முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் அனைத்து மாவட்ட தலைவர்கள், அனைத்து கோஷ்டித் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருடன் வீரப்ப மொய்லியும், பிற தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸார் கலந்து கொண்டனர்.
தேர்தலில் போட்டியிட சீட் கேட்டும் ஏராளமான காங்கிரஸார் குவிந்ததால், சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் அலைமோதியது. இந் நிலையில் சட்டசபைத் தேர்தலில் புதுமுகங்களுக்கே அதிக அளவில் சீட் கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், டி.சுதர்சனம் போன்ற மூத்த தலைவர்களுக்கு சீட் கொடுப்பதை விட சட்டசபையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் வகையில் இளைஞர்களுக்கு, இதுவரை ஒருமுறை கூட சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாதவர்களுக்கு அதிக அளவில் சீட் தர கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து ராகுல் காந்தி நேரடியாக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிகிறது. இதனால், புதுமுகங்கள், இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், ஏராளமான இளைஞர்கள் சீட் கேட்டு கட்சித் தலைமையகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் இளைஞர்கள்தான் அதிக அளவில் சென்னையில் குவிந்துள்ளனர். கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களும் பெரும் நம்பிக்கையில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் வரை திமுக கூட்டணியில் ஒதுக்கப்படக் கூடும் என்பதால், இதில் பாதியளவுக்கு இளைஞர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கருணாநிதியிடம் பட்டியலைத் தந்த பின் நிருபர்களிடம் பேசிய வீரப்ப மொய்லியிடம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வலியுறுத்துவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, தேர்தலுக்குப் பின்னர் அது குறித்துப் பேசுவோம் என்றார்.
மொய்லியின் இந்தப் பேச்சை திமுக ரசிக்கவில்லை என்று தெரிகிறது. மாநிலத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திமுக கூறி வரும் நிலையில் மொய்லியின் பேச்சு திமுகவுக்கு எரிச்சலைத் தந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications