வருத்தமான மகிழ்ச்சியில் மணி சங்கர அய்யர்
டெல்லி:
பெட்ரோலியத்துறை தன்னிடமிருந்து பறிக்கப்பட்டது வருத்தம் தந்ததாக அத்துறையின் முன்னாள் அமைச்சர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தவர் மணிசங்கர அய்யர். அத்துறையிலிருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் மாற்றப்பட்டார். அத்துறைக்குப் பதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அய்யரிடம் ஒப்படைக்கப்பட்டது.அத்தோடு அவர் முன்பிருந்தே வகித்து வரும் பஞ்சாயத்து ராஜ் துறையும் அவரிடமே தொடர்ந்து உள்ளது.
அமெரிக்காவின் நெருக்குதலால் தான் அய்யரின் இலாகா மாற்றப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அய்யர் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது இலாகா மாற்றம் அப்போது வருத்தம் தந்ததாக அய்யர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் எனது இலாகா மாற்றப்பட்டது சற்றே வருத்தம் தந்தது என்பதை மறுக்கவில்லை. அதேசமயம், அதை நான் எதிர்பார்த்துதான் இருந்தேன்.
பெட்ரோலியம் இலாகா எனக்கு வழங்கப்பட்டபோது, இது தற்காலிக ஏற்பாடுதான், 20 நாட்கள் வரை இப்பொறுப்பில் இருங்கள் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் 20 மாதங்கள் அந்தப் பொறுப்பில் இருந்தேன். எனவே அதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூற முடியாது.
எனது இலாகா மாற்றப்பட்டதற்கு சோனியா காந்தி குடும்பமோ அல்லது ஓ.என்.ஜி.சி. தலைவர் சுபீர் ராகாவும் காரணம் என்பது தவறு. அவர்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை.
ஈரானிலிருந்து குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றுவதில் நான் தனி ஈடுபாடு காட்டியதாக கூற முடியாது. பிரதமர் அனுமதியோடுதான் நான் எதையும் செய்ய முடியும்.
அந்தத் திட்டத்தை நான் தீவிரமாக கவனம் செலுத்தியதால், அமெரிக்காவின் நிர்பந்தம் மற்றும் நெருக்கடி காரணமாக எனது இலாகா மாற்றப்பட்டது என்பது கட்டுக் கதை.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையும் முக்கியமான துறைதான். காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த முக்கியமான இலாகா எனக்கு அளிக்கப்படுவதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.
எனவே இந்த இலாகாவை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றார் அய்யர்.