நுழைவு தேர்வு ரத்து செல்லாது: உயர்நீதிமன்றம்!
சென்னை:
தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்து கொண்ட வந்த சட்டத் திருத்தம் செல்லாது. உடனடியாக நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ்டூ முடித்து விட்டு பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது.இந்த ஆண்டு முதல் தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவ மாணவியருக்கு நுழைவுத் தேர்வு கிடையாது, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கும் மட்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அத்தோடு இதுதொடர்பாக சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட்டு அதற்கு ஆளுனரும் அனுமதி அளித்தார். இந் நிலையில் தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ்டூ பயிலும் 3 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கடந்த வாரம் இரு தரப்பு வழக்கறிஞர்கள் வாதமும் முடிவடைந்தது. இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் வெளியிட்ட தீர்ப்பில்,
தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்து கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லாது. கிராமப்புற மாணவர்களின் நலனைக் காக்க இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது.
இது போன்ற விஷயங்களில் மத்திய அரசு மட்டுமே சட்டத் திருத்தங்களை செய்ய முடியும். தமிழக அரசுக்கு இதற்கு அதிகாரம் இல்லை. எனவே பழையபடி அனைத்து பிளஸ் டூ மாணவ, மாணவியருக்கும் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications