வைகோ முடிவுக்கு மதிமுக நிர்வாகிகள் ஒப்புதல்!
சென்னை:
திமுக கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ எடுத்த முடிவுக்கு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒரே குரலில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்த சர்ச்சையிலிருந்து சில தினங்களுக்கு முன்பு மீண்டு வந்தார் வைகோ. திமுக கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கும் என அவர் திட்டவட்டமாக அறிவித்தது, அதிமுக கூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்த முன்னணி மதிமுக தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.இதனால்தான் வைகோ கருணாநிதியை சந்திக்கச் சென்றபோது அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்ட யாருமே வைகோவுடன் போகவில்லை.
இந் நிலையில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிக்குழு நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் நடந்தது.
அவர்களுடன் வைகோ நீண்ட நேர ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில் தனது நிலையையும், மதிமுகவின் நிலையையும் விரிவாக எடுத்துக் கூறிப் பேசினார் வைகோ. சாதாரணமாக பேசினார் என்று கூறுவதை விட மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார் வைகோ.
உங்களது தியாகம் எனக்குப் புரிகிறது. உங்களது உழைப்பை நான் புறக்கணிக்கவிலலை. ஆனால் நாம் வாக்கு தவறாதவர்கள். கூட்டணியில் நீடிப்போம் என்று கூறி விட்டேன். எனவே டிக்கெட் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், நம்முடைய கூட்டணி வேட்பாளருக்காக உழைத்திட வேண்டும்.
பதவிதான் நமது குறிக்கோள் என்றால் எப்போதோ நாம் எங்கேயோ போயிருக்கலாம். ஆனால் நமது லட்சியம் அதுவல்ல என்று வைகோ பேசியுள்ளார்.
வைகோவின் பேச்சைக் கேட்ட மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் உங்களது முடிவை ஏற்கிறோம், நீங்கள் சொல்வதைச் செய்கிறோம் என்று ஒருமித்த குரலில் கூறி விட்டார்களாம். இதனால் வைகோ நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.
அத்தோடு அவைத் தலைவர் எல்.கணேசனும், வைகோவின் முடிவே மதிமுகவின் முடிவு. அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாம் கட்டுப்பட வேண்டும். அவருக்குப் பக்கபலமாக அனைவரும் இருப்போம் என்றும் கூறியுள்ளார்.
மொத்தத்தில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்பட்ட மதிமுக மா.செ. கூட்டம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.
தேர்தல் அறிக்கை குழு அமைப்பு:
இக் கூட்டத்தில் சட்டசபைத் தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழுவை நியமித்தார் வைகோ.
இக் குழுவில் திருப்பூர் துரைசாமி, ஆ.கே.குலோத்துங்கன், அ.பழனிச்சாமி, சிவகங்கை அ.கணேசன், செந்தில் அதிபன், பேராசிரியர் ந.ராமமூர்த்தி ஆகியோர் அடங்கியுள்ளனர்.
இதேபோல புதுவை மாநில தேர்தல் பணிகளைப் பார்த்துக் கொள்ள நா.மணிமாறன், அம்பலவாணன், வீ.த்து ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.