குண்டு புரளி: நியூயார்க்கில் 2 இந்தியர்கள் கைது
நியூயார்க்:
தங்களது சகோதரி நியூயார்க்கை விட்டுச் செல்வதைத் தடுப்பதற்காக விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக புரளி கிளப்பிய, இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூயார்க்கில் வசித்து வருபவர்கள் அமந்தீர் சிங், குர்பிரத் சிங். இருவரும் அமெரிக்க குடியுமை பெற்ற சகோதரர்கள். இவர்களது சகோதரிக்கு ஒரு டாக்டர் மாப்பிள்ளையை இரு சகோதரர்களும் பார்த்திருந்தனர்.ஆனால் அந்த மாப்பிள்ளையை விரும்பாத சகோதர, தான் காதலித்து வந்தவரையே திருமணம் செய்யப் போவதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
விமானம் மூலம் வேறு ஊருக்கு செல்ல அவர் முடிவு செய்ததை அறிந்த இரு சகோதரர்களும் எப்படியாவது தங்களது சகோதரியை தடுத்து நிறுத்த முடிவு செய்தனர். இதற்கு அவர்களுக்குத் தோன்றிய யோசனைதான் வெடிகுண்டு புரளி!
நியூயார்க் விமான நிலைய அதிகாரிகளுக்குப் போன் செய்த இருவரும், தங்களது சகோதரி செல்லவிருந்த விமானத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐக்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தொலைபேசி மிரட்டல் குறித்து விசாரணை நடத்திய எப்.பி.ஐ. புரளி கிளப்பிய இரு சகோதரர்களையும் கைது செய்தனர். ஏப்ரல் 10ம் தேதி இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இந்த வெடிகுண்டு புரளியால் இவர்களின் சகோதரியால் நியூயார்க்கை விட்டு செல்ல முடியாமல் போனது.
இருந்தாலும் தனது முயற்சியைக் கைவிடாத அவர் ரயில், காரில் சென்று காதலனை அடைந்து திருமணமும் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.
விசா மோசடி: நியூஜெர்சி இந்தியர் கைது
இதற்கிடையே அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் வசிக்கும் இந்தியர் விசா மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நரேந்திர மணலபா என்ற அந்த வெளிநாட்டு வாழ் இந்தியரை அமெரிக்க மார்ஷெல் சர்வீஸ் படையினர் கைது செய்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறைஇணையமைச்சர் அஹ்மத் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பிய இந்தியர்கள், பாகிஸ்தானியர்களிடம் இவர் பணம் வாங்கிக் கொண்டு மோசடி விசாக்களைத் தந்ததாகத் தெரிகிறது.
இவரது நான்கு வங்கிக் கணக்குகளில் இருந்த 5,794,592 டாலர்களை அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என ராஜ்யசபாவில் இன்று அஹ்மத்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications