ஜெ நடத்திய மிகப் பெரிய நாடகம்: ராமதாஸ்
திண்டிவனம்:
கூட்டணி தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் தனது பண்ணை வீட்டில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,கூட்டணி விஷயத்தில் தம்பி திருமாவளவனின் முடிவு அவசரப்பட்டு எடுக்கப்பட்டதாகும். அவரை கூட்டணியில் சேர்ப்பதற்காக நான் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
திருமாவளவன் குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடுமையான கருத்து எதையும் கொண்டிருக்கவில்லை. திருமாவளவனுக்கு எதிராகவும் அவர் எதையும் சொல்லவில்லை. ஆனால் அதற்குள் அவசரப்பட்டு அதிமுக அணியில் சேர்ந்து விட்டார் தம்பி.
நுழைவுத் தேர்வு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வேண்டுமென்றே தான் மிகவும் கடைசி நேரத்தில் சட்டத்தைக் கொண்டு வந்து யாருக்கும் உருப்படாமல் செய்து விட்டார்.
நுழைவுத் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையோ, ஆர்வமோ அவரிடம் இல்லை.
சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடரில் அதிலும் கடைசி நாளில் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். அதுவும் அவசர கதியில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் அது.
முறையான சட்டத் திருத்தமாக அது இல்லை. இதனால் நீதிமன்றத்தில் அது நிற்கவில்லை. ஜெயலலிதாவும் இதைத் தான் எதிர்பார்த்தார். சும்மா பேருக்கு சட்டம் கொண்டு வருவது மாதிரி கொண்டு வருவது. பின்னர் அதை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.
கிராமப்புற மாணவர்கள் நலன் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், மிகவும் உறுதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் ஜெயலலிதா செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் நடத்தியது மிகப் பெரிய தேர்தல் நாடகம் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்றார் ராமதாஸ் கடும் கோபத்துடன்.












Click it and Unblock the Notifications