மத்திய கூட்டணியில் மதிமுகவை தொடர விட மாட்டேம்: கருணாநிதி
திருச்சி:
வைகோ விலகியதால் தனிப்பட்ட முறையில் வருத்தமாகத்தான் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மதிமுக விலகல் குறித்து திருச்சி திமுக மாநாட்டு வளாகத்தில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,கூட்டணியை விட்டு விலகும் முடிவை வைகோ இப்போது எடுக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து விட்டார். இப்போதுதான் முறைப்படி சேர்ந்துள்ளார்கள்.
அவர்களிடம் நிறைய தொகுதிகள் கிடைக்கிறது என்றால், இருக்கிறது கொடுக்கிறார்கள். எங்களிடம் அவ்வளவு தொகுதிகள் இல்லையே, இருப்பதைத்தானே கொடுக்க முடியும்? நாங்கள் யாரையும் அவமதிக்கவில்லை, இருக்கிற இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அது அவமதிப்பா?
மதிமுக வெளியேறியுள்ளதால் சில தொகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம். கூட்டணியின் வெற்றியை அது பாதிக்காது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத முடிவுகளை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்தக் கூட்டங்களில் எல்லாம் மதிமுக கலந்து கொள்ளாமல் தனித்தே இயங்கியது.
விருதுநகரில் நடந்த கண்டன கூட்டத்தில் பேசிய வைகோ, ஜெயலலிதாவை தாக்கியோ, எதிர்த்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனவே ஜனவரி 18ம் தேதிக்கு முன்பே அங்கே பேசி முடித்து விட்டார்கள். அந்த முடிவுதான் இப்போது அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.
வரும் 6ம் தேதிக்கு மேல் கூட்டணிக் கட்சிகளுடன் மீண்டும் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுகிறோம். இன்னும் 3 நாட்களில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிந்து, தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்க்பட்டு விடும்.
தமிழக கூட்டணியிலிருந்து விலகி விட்டு மத்தியில் மட்டும் நீடிப்போம் என்று வைகோ கூறினால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். அவர் மத்தியிலும் கூட்டணியில் நீடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவோம்.
வைகோ விலகியதில் தனிப்பட்ட முறையில் வருத்தம்தான். மதிமுகவிலிருந்து யாரும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசவில்லை என்றார் கருணாநிதி.
மத்தியக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்குமாறு இன்று திருச்சி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கருணாநிதி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications