கருணாநிதி நினைத்திருந்தால் ஜெ காலி: ராமதாஸ்
திருச்சி:
திமுக தலைவர் கருணாநிதி மட்டும் நனைத்திருந்தால், அதிமுக ஆட்சி எப்போதோ டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
திமுக மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில், ஜெயலலிதா ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பலமுறை நான் திமுகவிடம் வலியுறுத்தி வந்தேன். ஆனால் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தக் கூடாது என்பதை கொள்கையாகவே கருணாநிதி வைத்திருப்பதால் ஜெயலலிதா தப்பித்துவிட்டார்.கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால் ஜெயலலிதா அரசு எப்போதோ டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கும். தமிழக மக்களும் இந்த மக்கள் விரோத அரசிடமிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.
அதிமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை பத்திரிக்கைகள் சரிவர எடுத்துக் காட்டவில்லை. இது வருத்தம் தருகிறது. இன்னும் கூடுதலாக ஜெயலலிதாவின் அரசின் அலங்கோலங்களை, தவறுகளை பத்திரிக்கைகள் சுட்டிக் காட்ட வேண்டும்.
வரும் சட்டசபைத் தேர்தலில் ஒரு அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறக் கூடாது. இதை சபதமாக எடுத்துக் கொண்டு அத்தனை தொண்டர்களும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.
வரதராஜன்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் பேசுகையில்,
கூட்டணிக் கட்சிகள் நடத்திய போராட்டத்தால் தான் வைகோ பொடாவில் இருந்து வெளியே வர முடிந்தது. ஆனால், முதலைக்கே இறை ஆவேன் என்று அவர் போனால் விட்டுவிட வேண்டியது தான். யார் யாரோ கூட்டு சேர்ந்து ஆட்சியைப் பிடிக்கலாம் என நினைக்கிறார்கள். இந்த நாடகமெல்லாம் தமிழக மக்களிடம் எடுபடாது என்றார்.
ஆர்.எம்.வீ:
எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், கூட்டணியில் எத்தனை தருவார், என்ன கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து வருபவர்கள் எப்போது வேண்டுமானாலும் போவார்கள்.
ஆனால், நாங்கள் கொள்கைரீதியாக திமுகவுடன் இணைந்து செயலாற்றுகிறோம். கருணாநிதி யாரை சீராட்டி வளர்க்கிறாரோ அவர்கள் முதுகில் குத்திவிட்டு ஓடுவது புதிதல்ல. ஆனால், கருணாநிதிக்கு இருப்பது எதையும் தாங்கும் இதயம் என்றார்.
டி.ஆர்.பாலு:
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பேசுகையில், கருணாநிதி நினைத்திருந்தால் இன்று வெளியே இருப்பவர் 10 வருடத்துக்கு உள்ளேயே இருந்திருப்பார். ஆனால், கருணை உள்ளம் கருணாநிதியுடன் பிறந்தது. இதனால் தாராளம் காட்டினார்.
மீண்டும் தலைவர் ஆட்சிக்கு வந்தவுடன் தலைவரை எப்படி நள்ளிரவில் கைது செய்தார்களோ அதே மாதிரி நாமும் கைது செய்ய வேண்டும் என்றார்.
கண்ணப்பன்:
மக்கள் தமிழ் தேசச் தலைவர் ராஜ கண்ணப்பன் பேசுகையில், சில கள்ளத் தோணிகள் கபபலை தட்டிவிட பார்க்கின்றன. அது முடியாது. திமுக என்ற மக்கள் இயக்கக் கப்பலை கருணாநிதி மாலுமியாக இருந்து காப்பாற்றி வருகிறார். காப்பாற்றுவார் என்றார்.
தா.பாண்டியன்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் பேசுகையில், நாம் முடிக்க வேண்டிய வேலை மிச்சம் இருக்கிறது. இதனால் நமது கூட்டணி தொடரும், வேலைகளை முடிப்போம் என்றார்.
தொடர்ந்து பேசிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் அதிமுகவை கடுமையாக சாடியும், வைகோவின் தாவலை கண்டித்தும் பேசினர்.
மாநாட்டில் தீ விபத்து:
முன்னதாக மாநாட்டுப் பந்தலில் சிறிய அளவிலான தீவிபத்து ஏற்பட்டு தொண்டர்களை பதற்றத்தில் ஆழ்த்தியது.
தலைவர்கள் அமர்ந்திருந்த மேடைக்கு முன் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீப்பொறியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் துரித கதியில் செயல்பட்டு தீயை அணைத்தனர்.
தீ காரணமாக பெரும் புகை மேடையின் முன்புறம் சூழ்ந்தது. இதனால் தொண்டர்கள் பீதியைடந்தனர்.












Click it and Unblock the Notifications