அதிமுக ஆட்சியை தூக்கி எறியுங்கள்: சோனியா
திருச்சி:
ஐந்தாண்டு கால மக்கள் விரோத அதிமுக ஆட்சியை வருகிற சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
திருச்சி திமுக மாநில மாநாட்டில் சோனியா நிறைவுரையாற்றினார். முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி நிறைவுரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு மாறாக, முதலில் கருணாநதி பேசினார். இதைத் தொடர்ந்து சோனியா நிறைவுரையாற்றினார்.சோனியா காந்தியின் ஆங்கிலப் பேச்சை முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், தமிழில் மொழி பெயர்த்தார்.
சோனியாவின் பேச்சில், மத்திய கூட்டணி அரசின் சாதனைகளே அதிகம் இடம் பெற்றிருந்தது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாட்டையும் சோனியா காந்தி வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
சோனியாவின் பேச்சு:
சுனாமி நிவாரணம், மழை, வெள்ள நிவாரணப் பணிகள் என தமிழகம் தத்தளித்தபோதெல்லாம் மத்திய அரசு மிகவும் தாராளமாக உதவி செய்தது.
தமிழக மக்களின் ஆதரவால்தான் மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் அமர முடிந்தது.
திமுக தலைவர் கருணாநிதியின் அனுபவம் வாய்ந்த அறிவுரைகள், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மன்மோகன் சிங் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 200 மாவட்டங்களில், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாவட்டங்களும் அடங்கும். இந்தத் திட்டம் மத்திய அரசின் சாதனைத் திட்டமாகும்.
தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டுள்ளது. வரலாற்று புகழ் கொண்ட தமிழுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியிருக்கிறோம். இதற்கு கருணாநிதியின் பங்கு முக்கியமானதாகும். தமிழக மக்களின் நீண்ட கால கனவான சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சுனாமி பேரலைகள் தமிழகத்தைத் தாக்கியபோது, ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டியது மத்திய அரசு. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்வது, நான்கு வழிப் பாதைகளை அமைப்பது என எண்ணற்ற சாதனைகளை செய்து வருகிறோம்.
இந்த சாதனைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 1 ரூபாயில் எஸ்.டி.டி. பேசும் வசதியும், உங்களது தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதியால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து, அதிமுக ஆட்சியை பதவியிலிருந்து அகற்றி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒளிமயமான வாழ்க்கையையும், வளமான வாழ்க்கையையும் உருவாக்குவோம்.
அதிமுக அரசின் கோரப் பிடியில் இருந்து தமிழகத்தைக் காப்போம். இந்த ஆட்சியை தூக்கி எறிவோம்.
கருணாநிதி கூறியதைப் போல, கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக இருந்து உழைத்தால் அந்த மகத்தான வெற்றி சாத்தியமாகி விடும் என்றார் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications