5 தொகுதி இழுபறி: வைகோ-காளிமுத்து சந்திப்பு
சென்னை:
மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 35 தொகுதிகளில் வைகோ கேட்டிருந்த 30 தொகுதிகளை மறு பேச்சு இல்லாமல்உடனடியாகத் தர முதல்வர் ஜெயலலிதா சம்மதித்து விட்டார்.
அதே நேரத்தில் மீதமுள்ள ஐந்து தொகுதிகள் தொடர்பாக இரு கடசிகளுக்கும் இடையே இழுபறிஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இதையடுத்து இரு கட்சிகளின் தேர்தல் குழுவினரும் இன்று அதிமுக தலைமையகத்தில் சந்தித்துப் பேசினர். சுமார்2 மணி நேரம் நடந்த இச் சந்திப்பின்போது பாண்டிச்சேரிக்கான தொகுதிப் பங்கீடு குறித்தும் பேசப்பட்டது.
அதிமுக சார்பில் அமைச்சர்கள் ஓ.பி, ஜெயக்குமார், தளவாய் மற்றும் மணியன், செங்கோட்டையனும் மதிமுகசார்பில் இல.கணேசன், மு.கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரும் இந்த ஆலோசனைகளில்பங்கேற்றனர்.
ஜெயலலிதாவை வைகோ சந்தித்தபோது 40 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்தார். அப்போது 40தொகுதிகளிலும் மதிமுகவின் பலம் குறித்து ஜெயலலிதா வைகோவிடமே கேட்டுள்ளார்.
வைகோவும் ஒவ்வொரு தொகுதியிலும் தனது பலம் குறித்து ஜெயலிலதாவிடம் விளக்கியுள்ளார். அப்போதுஇத்தனை புள்ளி விவரங்களை எப்படி அடுத்தடுத்து எடுத்து வைக்கிறீர்களே என்று ஆச்சரியப்பட்டாராம்ஜெயலலிதா.
பின்னர் மதிமுகவுக்கு 35 தொகுதிகள் என்று முடிவானது. அதில் வைகோ கேட்டிருந்த 30 தொகுதிகளைஉடனடியாக ஒதுக்க ஜெயலலிதா சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஐந்து தொகுதிகள் குறித்து பிறகு பேசிக் கொள்ளலம் என ஜெயலலிதா கூறிவிட்டார். இந் நிலையில்இன்று இரு கட்சியினரும் சந்தித்துப் பேசினர்.
மதிமுகவுக்கு கிடைத்துள்ள 30 தொகுதிகளில் சிவகாசி, விளாத்திகுளம், கோவில்பட்டி, கடையநல்லூர்,சங்கரன்கோவில், சென்னை துறைமுகம், மயிலாப்பூர், தாம்பரம், திருப்போரூர், பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகியதொகுதிகள் முக்கியமானவை என்று கூறப்படுகிறது.
சென்னையில் மட்டும் 3 தொகுதிகளை ஜெயலலிதா மதிமுகவுக்கு ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் துறைமுகம் தொகுதியில் திக பொதுச் செயலாளர் அன்பழகன் தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
துறைமுகம் தொகுதியில் கட்சியின் வட சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் ஜீவன், மயிலாப்பூர் தொகுதியில்தென் சென்னை மதிமுக செயலாளர் வேளச்சேரி மணிமாறன், தாம்பரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்சோமு, திருப்போரூரில் மல்லை சத்யா போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
சிவகாசி அல்லது விளாத்திகுளத்தில் வைகோ போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
தென் மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பரவலாக போட்டியிடும் வகையில் தொகுதிகளைக்கேட்டுள்ளார் வைகோ.
காளிமுத்துவை சந்தித்தார் வைகோ:
இந் நிலையில் இந்தக் கூட்டணிக்கு சசிகலா, எல்.கணேசன், உளவுத்துறை, சந்திரபாபு நாயுடு, மு.கண்ணப்பன் ஆகியோருக்கு இணையாக மிக முக்கிய பங்கு வகித்த அதிமுக அவைத் தலைவர் காளிமுத்துவை வைகோ மீண்டும் சந்தித்து நலம் விசாரித்தார்.
காளிமுத்து 2வது முறையாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை வைகோ நேற்று இரண்டாவது முறையாக சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் வெளியே வந்த வைகோ கூறுகையில், என்னைப் பார்த்ததும் காளிமுத்து சந்தோஷமடைந்தார். அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதற்காக மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்தார். இந்தச் செய்தியைக் கேட்டதுமே பாதி குணமடைந்து விட்டதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அதிகமாக படிக்க வேண்டாம், நன்கு ஓய்வெடுங்கள், இலக்கியம் போன்ற சிந்தனைக்கு அதிக வேலை கொடுக்கக் கூடிய வகையிலான நூல்களைப் படிக்காதீர்கள், இசை கேளுங்கள், பாடல்களைக் கேளுங்கள் என்று கூறினேன் என்றார் வைகோ.
முதல்முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளிமுத்துவை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பார்த்தார். அப்போது வைகோ கூட்டணிக்குள் வந்துவிடுவார் என்ற நிலை இருந்தது.
இந் நிலையில் பல்டி அடித்து திமுக கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்தார் வைகோ. இந் நிலையில் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார் காளிமுத்து. ஆனால், இம்முறை அவரை ஜெயலலிதா சந்திக்கவில்லை.
இப்போது வைகோ மீண்டும் அந்தர் பல்டி அடித்து அதிமுகவுக்குப் போய்விட்டதால் காளிமுத்து பெரும் நிம்மதி அடைந்துள்ளார்.