ஸ்டாலினை முதல்வராக்க திமுக திட்டம்: கூட்டணியிலிருந்து விலகியது குறித்து வைகோ
சென்னை:
அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவும், 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு பெரும் வெற்றியைத் தேடித் தரவும் முழு மூச்சுடன் பணியாற்றுவது என மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையை அடுத்த வானகரத்தில் மதிமுக பொதுக்குழு நடந்தது. கட்சி நிர்வாகிகளும் வைகோவும் பேசிய பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பாடுபட்டபோதிலும், திமுகவும், அதன் ஆதரவு தொலைக்காட்சியும் தொடர்ந்து மதிமுகவை புறக்கணித்து வந்தன. அனைத்து மட்டத்திலும் மதிமுகவைஅவர்கள் இருட்டடிப்பு செய்ததுடன், அவமரியாதை செய்த காரணத்தால், கடுமையான மனக்காயத்துக்கு தொண்டர்கள் உள்ளானார்கள்.
இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் இருந்தன. இதன் காரணமாகவே திமுக கூட்டணியிலிருந்து விலக நேரிட்டது.
தமிழக அரசு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்து, சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் வகையில் நடந்து கொண்டது. அதன் பின்னர் கடந்த ஓராண்டுகளில் தமிழக அரசு முன்பு மேற்கொண்ட பல நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்றது அல்லது திருத்தம் செய்து மக்கள் நலம் காக்க வழி செய்தது.
இதன் காரணமாகவும், நம்மை மதித்ததன் காரணமாகவும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதிமுகவுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியை இந்த பொதுக்குழு வரவேற்கிறது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், புதுவையில் 30 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற பேராதரவு வழங்கிடுமாறு இரு மாநில வாக்காளப் பெருமக்களையும் வேண்டிக் கொள்வதுடன், இக்கூட்டணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
தமிழகம், புதுவையில் அமையும் ஆட்சியில் மதிமுக பங்கேற்காது. அமைச்சரைவயிலும் இடம் பெறாது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிப்பது தொடர்பான விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளர் வைகோவுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பொதுக் குழுவில் உள்ள 1,580 உறுப்பினர்களில் 1,514 பேர் வந்திருந்தனர். மற்றவர்கள் உடல் நலம், குடும்பச் சூழ்நிலை காரணமாக வர முடியவில்லை, ஆனால் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதாக கடிதம் அனுப்பியிருந்தனர்.
அதிகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிமுகவினருடன் சேர்ந்துநேசமுடன் பணியாற்றத் தொடங்கி விட்டனர். 90 சதவீதம் பேருக்கு மேல் அதிமுகவுடன் உடன்பாடு என்ற எண்ணம்தான் நிலவி வந்தது. அதை நாங்கள் மதித்து உடன்பாட்டை மேற்கொண்டுள்ளோம்.
அதிமுகவினரும், மதிமுவினரும் நெருக்கமாக, நேசமாக, பாசமாக பழகி வருகிறார்கள். இதை நானே கண்கூடாகப் பார்த்தேன். இதனால் எனக்கும் நிரம்ப மகிழ்ச்சிதான்.
நான் அனைத்துத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்யப் போகிறேன். இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி. மக்கள் மன நிலை இந்த அரசுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்தும் வருகிறது. அரசுக்கு எதிராக ஒரு சிறிய உணர்ச்சி கூட இல்லை.
மதிமுக இரும்புக் கோட்டை. சுயநலம் இங்கு இல்லை. ஒளிமயமான எதிர்காலத்தினுள் மதிமக பிரவேசிக்கிறது. இங்கிருந்து யாராவது வெளியேற மாட்டார்களா என்று ஆசையுடன் சிலர் காத்திருக்கிறார்கள். ஆனால் அது நடக்காது, அவர்கள் ஏமாந்துதான் போவார்கள்.
மதிக போட்டியிடும் தொகுதிகளை ஒதுக்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. சுமூகமாகப் பேசி விரைவில் முடிவு செய்வோம்.
தேர்தல் பிரகடனம் (தேர்தல் அறிக்கை) தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.தேர்தல் பிரகடனத்தையும், வேட்பாளர்களையும் அறிமுகம் செய்ய சென்னையில் பிரமாண்டக் கூட்டம் நடத்தப்படும்.
இம்மாத இறுதிக்குள் பிரசாரத்தைத் தொடங்குவேன். தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து ஆட்சிமன்றக் குழுதான் முடிவு செய்யும்.
கலைஞர்தான் முதல்வர் என்று திமுக தரப்பில் பிரதானப்படுத்திக் கூறி வருகிறார்கள்.ஆனால் திமுகவின் ரகசியத் திட்டமே வேறு.
திமுக மேடைகளில் என்னைப் பற்றி என்ன பிரசாரம் செய்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை. எனது கட்சி பேச்சாளர்களிடம், தரக்குறைவான வகையில் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறேன் என்றார் வைகோ.
ஸ்டாலினின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளதாகக் கருதியதால் தான் வைகோவை கட்டம் கட்டி திமுக முன்பு வெளியேற்றியது நினைவுகூறத்தக்கது.