தண்ணீர் இல்லாமல் பாதியில் நின்ற ஊட்டி ரயில்
ஊட்டி:
ஊட்டிக்குச் சென்ற மலை ரயில், தண்ணீர் இல்லாததால், பாதியிலேயே நின்று விட்டது.இதனால் 300க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
மலைகளின் ராணியான ஊட்டிக்கு, மேட்டுப்பாளையத்திலிருந்து தினசரி மலை ரயில்(நீலகிரி பாசஞ்சர்) இயக்கப்படுகிறது.யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரிய சின்னமாக இந்த ரயில்அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஊட்டியில் சீசன் என்பதால் அங்கு பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.இந் நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குக் கிளம்பிய மலைரயிலில் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ரயில் கல்லார் ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென நின்றுவிட்டது. இதனால் பயணிகள் குழப்பமடைந்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ரயிலில் போதிய தண்ணீர்இல்லாததால், தொடர்ந்து ரயில் செல்ல முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.நீராவியினால்தான் இந்த ரயில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதி வழியிலேயே தவித்தனர். பின்னர் அனைவரும்கல்லார் ரயில் நிலையம் வரை தண்டவாளத்திலேயே நடந்து சென்று அங்கிருந்துபஸ்கள் மூலம் ஊட்டிக்குச் சென்றனர்.
தரமற்ற நிலக்கரி?
இந்த ரயில் அடிக்கடி பழுதாகிவிடுவது குறித்து பாலக்காடு ரயில்வே கோட்டமேலாளரிடம் கேட்டபோது,
இப்போது மலை ரயிலுக்கான என்ஜினில் பயன்படுத்தப்படும் நிலக்கரி தரமற்றதாகஉள்ளதாக புகார்கள் வருகின்றன. இதனால் அந்த நிலக்கரி சப்ளை தாற்காலிகமாகநிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றார்.