ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
சென்னை:
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீண்டும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை வந்த ஸ்டாலினை ரயில் நிலையத்தில் கத்தியால் குத்த முயன்ற நபரைபோலீஸார் தடுத்து நிறுத்தி அந்த முயற்சியை முறியடித்தனர். ஆனால் அந்த நபரைப்பிடிக்க முடியவில்லை, அவர் தப்பி விட்டார்.
இதையடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதுவரை அமைச்சர்களுக்கு வழங்கப்படும்பாதுகாப்பு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த ஸ்டாலினுக்கு இப்போது கூடுதலாக இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை சம்பவத்தையடுத்து டிஜிபி முகர்ஜி, உளவுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.
![]() |
இவர்களுக்கு நவீன ரக துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. எஸ்எல்ஆர் ரக ஆட்டோமேடிக் துப்பாக்கி தவிரஏகே 47 துப்பாக்கியும் வழங்கப்படும்.
ஸ்டாலின் மேயராக இருந்தபோது இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கபட்டு வந்தது. மேயர் பதவி பறிக்கப்பட்ட பின்அது விலக்கி கொள்ளப்பட்டது. இப்போது மீண்டும் உயர்ந்தபட்ச பாதுகாப்பு தரப்படுகிறது.
விசாரணை தீவிரம்:
இதற்கிடையே என்னைக் கொல்ல நடந்த முயற்சி குறித்து நான் கவலைப்படவில்லை. பொதுவாழ்வில் இதெல்லாம் சகஜமான விஷயம் என்று ஸ்டாலின்கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், இதுசம்பந்தமாக போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். என் மீது தாக்குதல்நடத்த முயன்றது யார் என்பது குறித்து அவரைப் பிடித்து விசாரித்தால்தான் தெரிய வரும்.
போதிய பாதுகாப்பு இருந்த காரணத்தால் தான் நான் தப்பித்து வந்துள்ளேன். பொது வாழ்வில் இது சகஜம் ஆகும். நான் ரயில் நிலையத்தில் நடந்து வந்துகொண்டிருந்தபோது எனது சட்டையை யாரோ பிடித்து இழுப்பது போல இருந்தது. அவருக்கு 50 வயது இருக்கும்.
அவர் கழக உடன்பிறப்பாக இருப்பார், ஆர்வக் கோளாறால் இழுப்பதாக நான் நினைத்தேன். அருகில் இருந்த மத்திய போலீஸார் அந்த நபரை பிடித்துஇழுத்து விட்டனர். அதன் பிறகு அங்கிருந்து நான் சென்று விட்டேன்.
பின்னர் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது அரசினர் விருந்தினர் மாளிகையில்தான் என்னைக் கொல்ல நடந்த முயற்சி குறித்து பாதுகாப்பு அதிகாரிகள்தெரிவித்தனர்.
மதுரை மாநகர காவல்துறை ஆணையர் என்னிடம் இதுகுறித்துப் பேசினார். உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார் என்றார் ஸ்டாலின்.
இதற்கிடையே ஸ்டாலினைத் தாக்க முயன்றவனின் கம்ப்யூட்டரில் வரைந்த மாதிரிப் படத்தை மதுரை போலீஸார் வெளியிட்டுள்ளனர். கண்ணாடி அணிந்துள்ளஅந்த நபர் குட்டைத் தலைமுடியுடன், மீசை இல்லாமல் காணப்படுகிறார்.
திடகாத்திரமான உருவமைப்பு கொண்ட அந்த நபருக்கு 45 வயது இருக்கலாம். நன்கு படித்தவர் போல காணப்படும் அவர் பேன்ட், சட்டை அணிந்திருப்பார் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் போலீஸாருக்குத் தெரிவிக்கலாம் என்று மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
சரியான துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 10,000 பரிசு தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நபரைப் பிடிக்க தனிப்படையும்அமைக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications