ரூ. 2 கோடி அன்பளிப்பு- ஜெ மீது சிபிஐ குற்ற பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
வெளிநாட்டில் இருந்து ரூ. 2 கோடி அன்பளிப்பு வந்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில்சிபிஐ இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஜெயலலிதா முதலாவது முறை முதல்வராக இருந்தபோது, 1992ம் ஆண்டில் அவரது பிறந்தநாளையொட்டி 88 டிடிக்கள் வந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 2 கோடி.இதையடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி அவர் மீது வழக்கு பதிவு செய்தது சிபிஐ.
நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கில், குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் சிபிஐக்கு அனுமதிஅளித்தது.
எம்எல்ஏவான ஜெயலலிதா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரிசபாநாயகர் ஆவுடையப்பனுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியது. இதற்கான அனுமதியைஆவுடையப்பன் வழங்கினார்.
இதையடுத்து இன்று சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது2,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மீனாட்சி சுந்தரத்திடம் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்தவழக்கில் 285 ஆவணங்களையும், 149 சாட்சிகளையும் சிபிஐ சேர்த்துள்ளது.